விரைவில் பிரபலப் பதிவராவது எப்படி? சில உதவிக் குறிப்புகள்
-| SanjaiGandhi™ |-
குறிப்பு: இது படைப்பாளிகளுக்கான அறிவுரை அல்ல. புதிய பதிவர்கள் பிறர் கவனம் பெறுவதற்கான உதவிக் குறிப்புகள் மட்டுமே. பிரபலப் பதிவர்கள் தங்களுக்கு பின்னூட்டமிடுவதில்லை என்று சிலர் வருந்தியதாக நண்பர் கேட்டுக் கொண்டதால் அவர்களுக்கான உதவிக் குறிப்பு தான் இது. எப்படி எழுத வேண்டும் என்று அறிவுரை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை( தெரிஞ்சா தானே).
ஆரம்பத்தில் சில உப்புமா பதிவுகளைப் போட்டு தமிழ்மணம், தமிழ்வெளி, தமிழிஷ் போன்ற பிரபல திரட்டிகளில் உங்கள் பதிவுகள் வரச் செய்யுங்கள். வரும் சில பின்னூட்டங்களுக்கும் உடனேயும் கலகலப்பாகவும் பதில் சொல்லுங்கள்.
எடுத்த எடுப்பிலேயே மிகச் சிறந்த பதிவுகளை எழுதி வீணடிக்க வேண்டாம். அது பிறரை போய்ச் சேராது. தாமதமாக படிக்க நேரும் போது யாரும் பழைய பதிவுகளுக்கு பின்னூட்டமிட மாட்டார்கள்.
பிரபல பதிவராக நீங்கள் நினைப்பவர்களுக்குத் தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள். அவர்கள் உங்களுக்கு பின்னூட்டமிடவில்லை என்று நிறுத்த வேண்டாம். உங்கள் தொடர்ச்சியான வருகை அவர்கள் கவனத்தை ஈர்க்கும். அவர்களைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் உங்களையும் கவனிப்பார்கள். மறக்காமல் உங்களைப் போன்ற புதியவர்களுக்கும் தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள்.
தினம் ஒரு பதிவு எழுத வேண்டாம். வாரம் ஒன்று அல்லது இரண்டு போதும். அடிக்கடி எழுதுவது படிப்பவர்களை அலுக்கச் செய்துவிடும். உங்களை புறக்கணிக்க வைக்கும்.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகளில் பதிவிட வேண்டாம். வெள்ளிக்கிழமை வளைகுடா பதிவர்கள் ஓய்வில் இருப்பார்கள். சனி, ஞாயிறில் ஐடி வல்லுனர்கள் ஓய்வில் இருப்பார்கள். பதிவர்கள் பெரும்பாலும் அலுவலங்கங்களில் தான் இயங்குகிறார்கள். அதனால் அவர்கள் ஓய்வில் இருக்கும் போது பதிவுகள் போட்டுவிட்டு பின்னூட்டம் வரவில்லை, ஹிட்ஸ் வரவில்லை என புலம்ப வேண்டாம்.
பதிவுகளை இரவில் அல்லது மாலையில் வெளியிட வேண்டாம். இந்திய நேரப்படி காலை 9 மணி முதல் 12 மணிக்குள் வெளியிடவும். இது அனைத்து தேச தமிழர்களுக்கும் பதிவுகள் வாசிக்க சரியான நேரம்.
பிறரின் பதிவுகளைப் படித்துவிட்டு தமிழ்மணம் மற்றும் தமிழிஷில் அவர்களுக்கு ஓட்டுப் போட்டுவிடுங்கள். ஓட்டுப் போட்ட விவரத்தை மறக்காமல் பின்னூட்டத்தில் சொல்லிவிடுங்கள். அப்போது தான் உங்களுக்கும் அவர்கள் ஓட்டுப் போடுவார்கள். அதிக ஓட்டுகள் வாங்கினால் தமிழ்மணம் பரிந்துரை மற்றும் தமிழிஷ் பிரபலப் பதிவுகள் பட்டியலில் உங்கள் பதிவு வந்துவிடும். தானாகவே அதிகமானோரின் கவனம் பெறுவீர்கள்.
விருதுகளை உருவாக்கி நண்பர்களுக்குள் பகிர்ந்துக் கொள்ளுங்கள். மறவாமல் பிரபலப் பதிவர்களாக நீங்கள் நினைப்பவர்களுக்கும் விருதுகளை வழங்கி அவர்களுக்கு தெரிவித்துவிடுங்கள். விருது பெறுபவர்கள் தங்கள் தளத்தில் உங்களுக்கு நன்றி சொல்லி சுட்டி கொடுத்துவிடுவார்கள். அதை பார்த்து பலர் உங்கள் பதிவை படிப்பார்கள். தேவையானால் உங்கள் பாலோயராக மாறி தொடர்ந்து வாசிக்கவும் செய்வார்கள்.
இது போன்ற விருது கொடுக்கும் போது சில ப்ராபளப் பதிவர்கள் நக்கல் அடிக்கவும் செய்வார்கள். அதை எல்லாம் கண்டுக் கொள்ள வேண்டாம். அவர்கள் செய்வதை எல்லாம் உங்களிடம் அனுமதி பெற்றா செய்கிறார்கள். நீங்கள் மட்டும் ஏன் கண்டுகொளள வேண்டும்.
ஆரம்ப காலத்திலேயே யாருக்கும் பிரச்சனைக்குரிய பின்னூட்டங்கள் போட வேண்டாம். உங்கள் பற்றிய தவறான எண்ணத்தை உருவாக்கும். இப்போது பதிவுலகில் குழு மனப்பான்மை அதிகரித்துவிட்டது. நீங்க பிரச்சனைக்குரிய பின்னூட்டம் போடுபவர் மிகப் பிரபலமான பதிவராக இருக்கும் பட்சத்தில் அவரிடம் நல்ல பிள்ளை பெயரெடுக்க சிலர்(அனைவரும் அல்ல..) உங்களை எதிர்ப்பார்கள் அல்லது ஒதுக்குவார்கள்.
இதை எல்லாம் பின்பற்றினால் மூன்று மாதங்களில் நீங்களும் பிரபலம் ஆகிவிட முடியும். பின் ஜாலியாக மொக்கை போட்டு நட்பு வளர்த்தோ( என்னை மாதிரி) அல்லது சிறந்த படைப்புகளை படைத்தோ பதிவுலகில் உங்கள் விருப்பம் போல் செயல்படுங்கள்.
மூன்று பிரபலத் திரட்டிகளில் தொடர்ந்து உங்கள் பதிவுகள் வருவதை உறுதி செய்துக் கொள்ளுங்கள். தமிழிஷ் மற்றும் தமிழ்மணம் கருவிப் பட்டை நிறுவிவிட்டால், யார் வேண்டுமானாலும் சுலபமாய் உங்கள் பதிவை இணைத்துவிட முடியும். தமிழ்வெளி(tamilveli.com)யில் உங்கள் வலைப்பூவை இணைத்துவிட்டால் போதும். புதுப் பதிவுகளை தானாகவே எடுத்துக் கொள்ளும். ஈழம் தொடர்பான இடுகை எழுதுபவர்கள் தமிழ்வெளி மூலம் அதிக வாசகர்களைப் பெற முடியும்.
[இந்த மாதம் வெள்ளிநிலா இதழுக்காக எழுதிய பதிவு]























