
வலையுலகின் சுனாமியாய் மையம் கொண்டு அனைத்து திசைகளிலும் சுழற்றி அடிக்கும் சூறாவளிப் புயல் அண்ணன் சக்திவேல் அவர்களைப் பற்றி அறிமுகம் செய்வது அவருக்கு அவமானமாய் தான் இருக்கும். அவரைத் தெரியாத யாருக்கும் பதிவுலகில் இருக்க தகுதியே இல்லை. அபப்டி தகுதி இல்லாதவர்கள் தெரிந்துக் கொண்டால் என்ன தெரிந்துக் கொள்ளவில்லை என்றால் என்ன?. பூவுக்கே வாசமா? சக்திவேலுக்கே விளம்பரமா என்பது போல் நேரடியாக பேட்டிக்குள் சென்றுவிடுவோம். வலையுலகம் சார்பில் நான் கேட்ட கேள்விகளுக்கு சக்திவேல் அவர்கள் அளித்த பதில்.
1. உங்களைப் பற்றி சுருக்கமாக சில வரிகள் சொல்லுங்க சக்திவேல்?
முதலில் என்னை பேட்டி எடுக்க வந்தமைக்காக உங்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான்,"உப்பு" விளையும் பூமியிலிருந்து வந்தவன், சென்னையில் வளர்ந்தவன்,
என் உயிருக்கும் மேலாக நேசிக்கும் சினிமாவின் மடியில் வாழ்பவன்...இன்னும் திருமணமாகாத பேச்சுலர் பார்ட்டி நான்.
2. நீங்கள் வலைப்பதிவு எழுத வந்த அனுபவம் பற்றி சொல்லுங்க?
யாரும் எனக்கு அறிமுகப்படுத்தவில்லை. நானாக எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன்.என் மனதுக்குள் வெளியே சொல்ல முடியாத பல விஷயங்களை எழுதுவதற்கு வலைப்பதிவு ஒரு பெரிய வரப்பிரசாதம். அது மட்டுமில்லாமல் என் எழுத்து திறமைகளை வெளிப்படுத்துவதற்கு வலைப்பதிவு ஒரு உற்ற நண்பனாக அமைகிறது.
3. இதுவரை நீங்கள் எழுதிய எந்தப் பதிவையாவது திரும்ப படிக்கும் போது “ அடடா.. இதை மொக்கையா எழுதிட்டோமே” என்று நினைத்ததுண்டா?
மொக்கை என்று சொல்ல முடியாது, "பதிவுத்தளத்தில் எனது முதல் சிறுகதை: குமரேசனின் மகன்!" என்ற பதிவு எனக்கு முழு திருப்தியை தரவில்லை. ஆனால் பின்னூட்டம் இட்ட நண்பர்கள் இது முதல் முயற்சி தானே பரவாயில்லை என்றார்கள்.
4.உங்கள் எழுத்தைப் பற்றி நீங்கள் எப்படி விமர்சிப்பீர்கள்?
உண்மைகளை எழுதுவதற்கு ஏன்? உன் எழுத்து இன்னும் பயப்படுகிறது? என்ற கேள்வியை என் மனசாட்சி எனக்குள் அடிக்கடி கேட்டுக் கொள்ளும்.
ஏனென்றால் எல்லா இடங்களிலும், எல்லோருக்கும் உண்மைகள் கசக்கத்தான் செய்கின்றன.
5.இதுவரை உங்கள் எழுத்திற்கு எது போன்ற பாராட்டுகள் அல்லது அங்கீகாரங்கள் கிடைத்திருக்கின்றன? அதில் நீங்கள் உயர்வாய் நினைக்கும் அங்கீகாரம்/பாராட்டு எது?
மிக குறுகிய காலத்தில் நான் எழுதிய பல இடுகைகள் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்துள்ளது, என்னை கிள்ளுக்கீரையாக நினைத்து பழகும் என் அருகில் இருக்கும் நண்பர்கள் கூட எனது பதிவுகளை படித்து விட்டு உனக்குள் இவ்வளவு எழுத்து திறமையா?என்றெல்லாம் வியந்து பாராட்டியிருக்கிறார்கள்.
"தமிழ் 10" திரட்டி தளத்தில் "சிறப்பு பரிசு பெரும் பதிவர்" பகுதியில் முதல் பதிவராக என்னை தேர்ந்தெடுத்து பணப்பரிசு வழங்கியிருக்கிறார்கள். நான் இது குறித்து tamil10 நிர்வாகத்திடம், "என்னை விட பல மூத்த பதிவர்கள் இங்கே இருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது என்னை தேர்ந்தெடுத்து பரிசு வழங்க காரணம் என்ன?" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள் எங்களுடைய திரட்டியில் உங்கள் பதிவுகளை படிக்க வரும் வாசகர்கள் தான் அதிகம், மேலும் பொதுவாக பதிவை படிக்க வரும் வாசகர்கள் பதிவின் தலைப்பை பார்த்து விட்டுத் தான் அந்த பதிவுக்குள்ளேயே செல்வார்கள் ஆனால் உங்கள் பதிவுகளைப் பொறுத்தவரையில் அதையெல்லாம் பார்க்காமலேயே படிக்கிறார்கள் என்றார்கள். எனக்கு இந்த தகவல் உண்மையிலேயே இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
உயர்வாக நினைக்கும் "அங்கீகாரம்" என்று சொன்னால் நான் எழுதிய
"என்னுடன் பழகிய மக்களில் 80 சதவீதம் பேர் இப்போது உயிருடன் இல்லை? - ஒரு நடிகரின் ஈழ சோகம்"
என்ற பதிவை கனடாவில் உள்ள ஈழத்தமிழர்கள் அவர்களுடைய தனி ஈழம் போராட்டங்களின் போது பிரதி எடுத்து (பிட் நோட்டிஷாக ) அங்குள்ள மக்களிடம் விநியோகம் செய்தார்கள் என்ற தகவலை அங்கு உள்ள தமிழ் நண்பர் ஒருவர் என்னிடம் கூறிய போது உண்மையிலேயே நான் ஆனந்த கண்ணீர் வடித்தேன், ஒரு அடிமைப்படுத்தப்படும் இனத்தின் விடியலுக்காக என் எழுத்தும் ஒருவகையில் பயன்படுத்தப் பட்டிருப்பதை நான் என் எழுத்துக்கு கிடைத்த மிக உயர்வான அங்கீகாரமாகவே நினைக்கிறேன். இந்த தகவலை அறியத் தந்த அந்த கனடா தமிழ் நண்பருக்கும் இந்த வேளையில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
6. தமிழ்மணம் திரட்டியின் பரிந்துரை விஷயத்தில் நடந்த தில்லுமுள்ளுகளை கண்டு அனைவரும் ஒதுங்கி இருந்த நிலையில் உங்களுக்கு மட்டும் அதைத் தட்டிக் கேட்கும் துணிவு எப்படி வந்தது?இல்லை, நான் பல மாதங்களாக கவனித்து வந்த நிலையில் தான் அந்த பதிவை எழுத நேர்ந்தது.இந்த விஷயத்தில் துணிவு என்று சொல்வதை விட உண்மை ஜெயிக்க வேண்டும்,நேர்மை இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை,இப்படி நான் கேட்டதால் என்னுடைய பதிவுகளை "தமிழ்மணம்" புறக்கணித்தாலும் (இதுவரை புறக்கணிக்கவில்லை.) அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். நல்ல விஷயங்கள் எங்கு வேண்டுமானாலும் கவனிக்கப்படும். "தமிழ்மணம்" மட்டுமல்ல வேறு எங்கு தவறுகள் நடந்தாலும் நான் கேட்பேன்.
7. இந்த விஷயத்தில் உங்களுக்கு கிடைத்த பலன் என்ன ? நஷ்டம் என்ன?தொடர்ந்து இரண்டு தடவைகள் எனது பதிவுகள் பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் அதில் எனக்கு துளியும் சந்தோஷம் இல்லை, எனென்றால் அந்த பதிவுகளும் பரிந்துரைக்கு தகுதியே இல்லாத பதிவுகள் தான்.அதன் மூலம் அது ஒரு குறிப்பிட்ட கும்பலின் கையில் சிக்கியிருக்கிறது என்ற உண்மை வெளிவந்தது. என்னுடைய இந்த பதிவை படித்து விட்டு பொறுக்க முடியாத பல "பிரபல பதிவர்களும்,மூத்த பதிவர்களும்" ஒன்றாக சேர்ந்து கொண்டு பின்னூட்டங்கள் வாயிலாக என்னை கேலியும், கிண்டலும் செய்தார்கள்.
கொஞ்சம் மனசு வருத்தப்பட்டாலும் உண்மையை வெளியே கொண்டு வந்த திருப்தி எனக்கு இருந்தது.இந்த விஷயத்தில் என்னை கேலியும்,கிண்டலும் செய்தவர்களைப் நினைத்து பார்த்தபோது எனக்கு சிரிப்பு தான் வந்தது.அதே நேரம் பாவமாகவும் நினைக்கத் தோன்றியது. உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத கோழைகள் அவர்கள்.
8.இதற்காக ஏதும் மிரட்டல்கள் வந்தனவா? அப்படி வந்தால் எப்படி எதிர்கொள்வீர்கள்?மிரட்டல்கள் வரவில்லை, பிரபல பதிவர் "உண்மைத்தமிழன்" அவர்கள் என்னை தொடர்பு கொண்டு இது குறித்து விளக்கமாகப் பேசினார்.மிரட்டல்கள் வரும் அளவுக்கு இதை நான் ஒரு பெரிய விஷயமாக எனக்குப் படவில்லை.
9
.இந்தப் பதிவை எழுதிய பின் உங்களை வலைப்பதிவில் இருந்து துரத்த அந்த பரிந்துரை கும்பல் முயல்வதாக பேசப்படுகிறதே. எப்படி சமாளிப்பீர்கள்?அதை பற்றி நான் கொஞ்சமும் வருத்தப்படப் போவதில்லை,என் எழுத்துக்கென்று உள்ள வாசகர்கள் மட்டும் எனக்கு போதும், ஜால்ரா கும்பலின் பரிந்துரை எனக்கு அவசியமில்லை.அப்படி செய்தாலும் நட்டம் அவர்களுக்குத்தான், எனக்கு இல்லை.
10.அந்த பரிந்துரை கும்பலில் அட்டகாசத்தை ஒழிக்க ஏதும் திட்டம் இருக்கிறதா?இல்லை, அசிங்கத்தை கண்டு ஒதுங்கிப்போகவே நினைக்கிறேன்.
11.நீங்கள் அம்பலப் படுத்திய பிறகு உங்களுக்கு பயந்து தமிழ்மணம் உங்கள்
பதிவுகளையும் பரிந்துரை பட்டியலில் கொண்டு வந்தது. அதே போல் தமிழர்ஸ் தளம் ஆங்கிலத்தில் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தீர்கள். அதற்கு ஏதும் பலன் இருக்கா? மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க யோசித்து இருக்கிங்க?இல்லை."தமிழர்ஸ்" தளத்தின் முகப்பு பக்கம் இப்போதும் ஆங்கிலத்தில் தான் திறக்கிறது.இதிலிருந்தே தெரிகிறது அவர்கள் பதிவர்களை எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்று.மேலும் என்னுடைய user name மற்றும் password இரண்டையும் முடக்கி வைத்து விட்டார்கள். இனி நான் தமிழர்ஸ் தளத்தில் எந்த பதிவையும் இணைக்க முடியாது என்று நினைக்கிறேன், வேண்டுமென்றால் வேறு புதிய பெயரில் இணைக்கலாம், ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை. ஒரு பதிவரை இழப்பதால் யாருக்கு நட்டம்.
12.உங்களின் சினிமா விமர்சனப் பதிவுகள் பிரமிக்க வைக்கின்றன. இந்த திறமை உங்களுக்கு எப்படி கிடைத்தது?இதில் கிடைப்பது என்று ஒன்றுமில்லை. இரும்பு ஊற கல்லும் தேயும் என்று சொல்வார்கள். அது போலத்தான் எழுத எழுத என்னுடைய எழுத்துகள் கூர்ர்மையாகியிருக்கலாம்.அல்லது நல்ல சினிமாக்கள் வர வேண்டும் என்ற கோபம் என் எழுத்தில் வெளிப்பட்டிருக்கலாம். அது உங்களை பிரமிக்க வைத்திருக்கலாம்.
13. சசிகுமார் போன்ற தொடமுடியாத உயரத்தில் இருக்கும் சினிமா ஜாம்பவான்களை எல்லாம் அனாயசமாக சந்தித்துப் புகைப்படமும் எடுத்துக் கொண்டு அசத்துகிறீர்கள். இது போல் உங்களுக்கு வேறு எந்த சினிமாகாரர்களை நன்றாகத் தெரியும்?நிறைய பேரை தெரியும். ஆனால் தேவையன்றி அவர்கள் மூலமான விளம்பரத்தை நான் எப்போதுமே விரும்புவதில்லை. அதனால் மனிக்கவும்.
14. கூகுள் ஆட்சென்ஸ் தமிழைப் புறக்கணிப்பதைப் பற்றி ரத்தம் கொதிக்க எழுதி இருந்தீர்கள்.அதற்கு கூகுளிடமிருந்து ஏதும் மெயில் வந்ததா? அந்த பதிவை எழுதும் போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?எந்த மெயிலும் வரவில்லை. தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது எல்லா இடங்களிலும் நடக்கிறது என்ற உண்மை புலப்பட்டது.
15.வலையுலகில் தற்போது பலராலும் எழுதப் படுவது உங்களுக்குத் திருப்தியாக இருக்கிறதா? அல்லது எரிச்சலைத் தருகிறதா?திருப்தியையும், எரிச்சலையும் ஒரு சேரத் தருகிறது.
16.உங்களின் தந்தையர் தின சிறப்புப் பதிவுக்கு இணையாக இதுவரை யாராவது எழுதி இருக்கிறார்களா?எனக்கு தெரியவில்லை. அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
17. புதிதாக எழுத வருபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?உங்கள் எழுத்தை யாருக்காகவும் சமரசம் செய்து கொள்ள வேண்டாம்.மனதில் பட்டதை தைரியமாக எழுதுங்கள்,
18. மூத்த அல்லது பிரபலப் பதிவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?என்னைப் பொருத்தவரையில் அவர்கள் மீது மிகுந்த மதிப்பும்,மரியாதையும் வைத்திருக்கும் அதே நேரத்தில் புதியவர்களையும் அரவணைத்து செல்வதற்கு அவர்கள் முன் வர வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்!
ஆனால் பெரும்பாலான பிரபல,மற்றும் மூத்த பதிவர்கள் இந்த விஷயத்தில் குழந்தைகள் போல நடந்து கொள்கிறார்கள். பொதுவாகவே வயதானவர்களுக்கு தாங்கள் தங்களுடைய குடும்பத்தால் ஒதுக்கப்படுகிறோமோ? என்ற பயம் இருக்கும். அந்த பயம் கோபமாக மாறி அதனால் அவர்கள் எல்லா விஷயங்களிலும் குழந்தைகள் போல அடம் பிடிப்பார்கள், சண்டை போடுவார்கள். அது போலத்தான் பிரபல, மற்றும் மூத்த பதிவர்களும்.
புதியவர்கள் பதிவுலகத்துக்குள் வந்தவுடன் அவர்களை துரத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள், எங்கே, புதியவர்களால் தங்களுடைய இடம் பறிபோய் விடுமோ? என்ற பயம் காரணமாக இருக்கலாம். இந்த பயம் முதலில் அவர்களிடம் மாற வேண்டும்.நல்ல எழுத்துகளுக்கு எப்போதுமே சிம்மாசனம் உண்டு என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.எத்தனை பிரபல பதிவர்கள் மற்றும் மூத்த பதிவர்கள் புதியவர்களை வரவேற்கிறார்கள் சொல்லுங்கள். இந்த விஷயத்தில் அவர்கள் மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளைப் போன்றவர்கள்.
19. மிகச் சிறந்த இடுகைகளுக்குக் கூட கும்மி அடிக்கும் சில பதிவர்களைப் பற்றிய கருத்தென்ன?நல்ல கேள்வி, என்னைப் பொறுத்தவரையில் ஆபாச வார்த்தைகளை உபயோகப்படுத்தும் அனானி கும்பலுக்கும், இவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இப்படிப்பட்டவர்கள் பதிவுலகத்தை விட்டு வெளியேறுவது நல்லது.கைத்தட்டல் ஓசைகளில் உண்மைகள் வெளியே தெரியாமல் போய்விடும் என்று தப்புக் கணக்கு போடும் சுயநலவாதிகள் இவர்கள்.
20.பொதுவாக பிரபலப் பதிவர்கள் என்றால், அவர்களுக்கு வாசகர் கடிதம் வந்திருக்க வேண்டும் என்பது வலையுலக விதி. உங்களுக்கு அது போல் ஏராளமான கடிதம் வந்திருக்குமல்லவா? அதில் நீங்கள் மிகவும் ரசித்த வாசகர் கடிதம் எது? ஏன்?நிறைய வந்திருக்கிறது.குறிப்பாக "குசும்பன்" என்றொரு பதிவர் எழுதும் பின்னூட்டங்களை நான் வெகுவாக ரசித்தேன்.அவருடைய பெயரைப் போலவே எழுத்திலும் ரொம்ப குசும்பு.
21.உண்மையிலேயே இது போல் வாசகர் கடிதம் வருகிறதா?. அல்லது தோராயமாக பேர் போட்டு வெளியிடுகிறார்களா? ஏனென்றால் அதில் அனுப்புபவர்களின் இ-மெயில் ஐடியை யாருமே குறிப்பிடுவதில்லை. அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன். நீங்கள் மனசாட்சிப்படி நடந்துக் கொள்வீர்கள் என்பதால் கேட்டேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்?இதில் மன்னிப்பதற்கு ஒன்றுமில்லை. சிலபேர், தங்கள் முகத்தை மறைத்துக் கொள்ள விரும்பலாம். அதே நேரம் தனக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்று நினைத்திருக்கலாம். உண்மையிலேயே வாசகர் கடிதம் வருகிறது.
22.உங்கள் பதிவை படித்து பின்னூட்டம் போடுவதைத் தவிர வேறு என்ன வழிகளில் வாசகர்கள் பாராட்டுகிறார்கள்?நேரிலும், தொலைபேசியிலும் பாராட்டுகிறார்கள், சில பதிவுகளைப் பற்றி விவாதம் செய்கிறார்கள். எனது தந்தையர் தின பதிவை படித்து விட்டு ஒரு நண்பர் என்னை நேரின் சந்தித்து ரொம்பவும் மனம் நெகிழ்ந்து பேசினார். உடனே என்னுடைய வலைத்தள முகவரியையும் அவரது குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கொண்டார். இது போன்ற நிகழ்வுகள் என்னை இன்னும் சிறப்பாக எழுத தூண்டுகிறது.
24.சினிமாத் துறையில் உங்களின் அனுபவம் என்ன?சினிமா என்னுடைய வாழ்க்கையில் ஒன்று என்பதால் இங்கே இந்த தகவலை நான் சொல்வது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன்.
25. பதிவு எழுத வந்தோமா போனோமான்னு இல்லாம எதுனா அரசியல் பண்ணி சண்டைப் போட்டுக்கும் பதிவர்களைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது?மலிவான விளம்பரம் தேடுபவர்கள்.
26. பதிவுக்கு பின்னூட்டமும் ஓட்டும் போட்டே ஆகனுமா? அதுக்குத் தான் எழுத வாராங்களா? சிலர் பதிவுக்கு பின்னூட்டம் போட்டால் ப்ளாக் ஹேக் பண்ணிடுவாங்க. தெரியுமா? அந்த பயத்தில் நான் கூட சிலருக்கு பின்னூட்டம் போடுவதில்லை. இதற்கு என்ன தீர்வு?பின்னூட்டம் போட்டால் ஓட்டும் போட வேண்டிய அவசியம் இல்லை, அதே நேரம் அந்த பதிவு தரமானதாக இருந்தால் ஒட்டு போடுவது சரியானதாகும். ப்ளாக் ஹேக் பற்றி சொல்வதானால் எல்லாவற்றுக்கும் ஆரம்பம் என்று இருந்தால் அதற்கு முடிவும் உண்டு அதே போல் தான் இதற்கு தீர்வும் கண்டிப்பாக இருக்கும். ஆனால் பக்குவப்பட்ட நண்பர்கள் இது போன்ற கேவலமான காரியங்களை செய்ய மாட்டார்கள்.
27. "ப்ளாக்ஸ்பாட்" தளமாக இருந்த உங்கள் வலைப்பூவை திடீரென்று "டாட்.காமாக" மாற்றிய காரணம் என்ன?படிக்க வருபர்கள் முகவரியை ஞாபகம் வைத்து தளத்துக்குள் எளிதாக வர வேண்டும் என்கிற நல்ல எண்ணம் தானே தவிர வேறொன்றுமில்லை.
28.கடைசிக் கேள்வி.. உங்கள் லட்சியம் என்ன? அதில் எவ்வளவு தூரம் கடந்திருக்கிறீர்கள்?மன்னிக்க வேண்டும், எனது லட்சியம் சினிமா சம்பந்தப்பட்டது மற்றும் சொந்த விஷயம் என்பதால் இந்த இடத்திலும் அதை சொல்ல விரும்பவில்லை, ஆனால் எனது லட்சியப் பாதையில் மெதுவாக அடியெடுத்து வைத்து முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். கடவுளின் ஆசீர்வாதத்தில் கண்டிப்பாக என் லட்சியம் நிறைவேறும். அதன் மூலம் வரும்
பேர், புகழ் எல்லாமும் இறைவனுக்கே.
Read more...