கந்த கந்த கந்த கந்த நொந்தசாமி
விக்ரம் படம் எல்லாம் நல்லாவே இருக்காது என்பதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. விஜய் படங்கள் மட்டும் தான் நல்லா இருக்கும். வேணும்னா எங்க க்ளாஸ் பசங்க கிட்ட வந்து கேட்டுப் பாருங்க என்றான் என் சின்னத் தம்பி ஆதி. முதல் பாதி ஓகெ. இரண்டாவது பாதியை சொன்னதுக்காகவே உன்னையும் தூக்கிட்டுப் போறேண்டா என வம்படியாக கந்தசாமி பார்க்க முடிவு செய்தோம். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பதிவர் நண்பர் ஹீம்@சதிஷ் போன் பண்ணார். விஷயத்தை சொன்னேன். அய்யய்யோ போகாதிங்க என்றார். என்னய்யா இது.. எதோ சுனாமி எச்சரிக்கையைவிட பலமா இருக்குதேன்னு நெனைச்சி மாமா, சித்தப்பா, தம்பி கிட்ட எல்லாம் சொன்னேன். அதெல்லாம் முடியாது, போகனும்னு முடிவு பண்ணியாச்சில்ல. போறோம்னான் என் ஒடன் பொறப்பு. அகராதிப் புடிச்ச பயலுகளா இருக்காய்ங்களேன்னு கிளம்பியாச்சி.
ஓபனிங் சீனே படத்தின் ரேஞ்ச் என்ன என்பதை புரிய வைத்துவிட்டது. விட்றா.. விட்றா சூனா பானான்னு மனச தேத்தியாச்சி. நாலு வரி டயலாக் பேசறாங்க. பாட்டு வருது. அடுத்த கொஞ்ச நேரம் பேசிக்கிறாங்க. பாட்டு வருது. அடுத்து இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கிறாங்க. பாட்டு வருது. இப்படியே மாத்தி மாத்தி அவங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாட்டும் வசனமும் போட்டு மூன்ற மணி நேரம் படத்தை ஓட்டினாங்க. இதுல எதோ சேட்டிலைட் டெக்னாலஜியாம்.. ஸ்ட்ரெய்ட்டா மெட்ராஸ்ல இருந்து தியேட்டருக்கு கனெக்ஷனாம்.. நேரடி ஒளிபரப்பாம். பக்கத்துல பொதுஜனம் பேசிக்கிச்சி. டேய் எங்க ஊர் தியேட்டர்( சினிமா கொட்டகை தான் சரி) எல்லாம் அவ்ளோ வொர்த் இல்லைடான்னு சொல்ல கவுரவம் ஒத்துக்கலை.
விக்ரம் ஒரு சிபிஐ ஆபிசர். கந்தசாமி கோயில்ல மக்கள் ஒரு சீட்ல தங்களோட கஷ்டங்களை எல்லாம் பேப்பர்ல எழுதி ஒரு மரத்துல கட்டிவிட்டுப் போறாங்க. அதை கொண்டுவந்து அதுல இருக்கிற குறைகளுக்கேத்த மாதிரி பண முடிப்புகளை அவங்களுக்கு கந்தசாமி வேஷத்துல விக்ரம் அண்ட் கோ கொடுக்கிறாங்க. இந்தப் பணத்தை எல்லாம் பெரும் பணக்காரர்களிடம் கொள்ளை அடிக்கிறாங்க. இதுக்கு விக்ரம் பின்னாடி பெரிய டீமே செயல்படுது. சண்டைக் காட்சிகளில் இவர்கள் அபத்தம் தாங்கலை. லாஜிக் மெய்ண்டெய்ன் பண்றாங்களாமாம். இந்த நண்பர்கள் குழு எல்லாம் ஒரு காலத்துல ஒண்ணா படிச்சவங்களாம். எல்லாரும் நாடகம் போடறதுல எக்ஸ்பர்ட்டுங்களாம். அந்த அனுபவத்தைப் பயன்படுத்தி தான் கந்தசாமி ட்ராமா பண்றாங்களாம். ரைட்டு இருக்கட்டும். இவர்கள் அனைவருக்கும் தலைவர் சிபிஐ உயரதிகாரி.
ரமணாவும் அந்நியனும் கலந்துகட்டி அடிச்சிருக்காங்க. கடைசியா கோர்ட் விக்ரமுக்கு தண்டனை கொடுக்கும். எப்டின்னா, இவர் இனி தமிழ்நாட்ல வேலை பார்க்காம வேற மாநிலத்துல வேலை செய்யனும்னு. ராஜஸ்தானுக்கு மாற்றலாகிப் போய்டுவார். அங்க ஒரு கோயிலுக்குப் போவார். அங்கயும் ஒரு மரத்துல மக்கள் குறைகளை எழுதி கட்டி இருப்பாங்க. அதுல ஒரு பேப்பரைப் படித்து மடித்து பாக்கெட்டில் போட்டுக் கொள்வார். அங்க ’கந்து’சாமி அவதாரம் எடுப்பார் போல. இதெல்லாம் நாங்க அந்நியன்லயே பார்த்துட்டோம் தண்ணியக் குடி தண்ணியக் குடின்னு நம்மளப் பார்த்தே சொல்லிக்க வேண்டி இருக்கு.
வடிவேலுகிட்ட கைநீட்டி சம்பளம் கொடுத்த பாவத்துக்காக ரெண்டு சீன்ல காட்றாங்க. வழக்கம் போல அடிவாங்கறார். பிரபு இவரை ரொம்ப சீரியசா விஜாரிக்கிறதெல்லாம் டூ மச்.. அதாவது ரொம்ப அதிகம்.. டைரடக்கர் தான் காப்பி அடிக்கிறார்னா இவருமா?. ஒருத்தர் மேல ஏறி உட்கார்ந்துட்டு அவரை அடிக்கப் பார்ப்பார். கீழ இருக்கிறவர் எங்கயோ ஏடாகூடமா பிடிச்சிப்பார். உடனே வடிவேலு அலறுவார். இந்தக் கர்மத்தை தான் முன்னாடியே “ ஒரு ஆம்பள இன்னொரு ஆம்ப்ளைய டச்சு பண்ணலாம்.. டிச்சுப் பண்ணப் படாது”ன்னு ஒரு படத்துல காமெடி( அப்டியா?) பண்ணி இருப்பார்.
இதுல தேவி சிரி பிரசாத் தன் பங்குக்கு எவ்ளோ காப்பி அடிச்சார்னு வடகரைவேலன் அண்ணாச்சி வூட்டுக்கு போன் பண்ணி என் சின்ன அக்கா கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கனும். காப்பி அடிக்கிறவங்கள கண்டுபிடிக்கிறதுல அவங்க தான் எக்ஸ்பர்ட்.
ஐயா சுசி கணேசன் அவர்களே,
படத்துல எதோ மெசேஜ் சொல்றிங்கன்னு தெரியுது. ஆனா அது என்னன்னு தான் மிகச் சரியா புரிஞ்சித் தொலைய மாட்டேங்குது. காசு வீணாக்காம புள்ளகுட்டிங்களை அல்லது கிராமங்களை தத்தெடுங்கன்னு சொல்ல வரீங்கன்னு நெனைக்கிறேன். சரிதானுங்களே. ஏஞ்சாமி ஊருக்கு மட்டுமே உபதேசம் பண்றதுக்கு தான் அரசியல் இருக்கே. எதுக்கு சினிமாவுக்கு வந்தீய?. 20 லட்சம் குடுத்து ஒருத்தன் கையை வெட்ட சொல்றது பணத்திமிர் தான். அதுக்கு பதில் 200 குழந்தைகளை படிக்க வைக்கலாம் என்பதும் சரி தான். ஒரு பொண்ணுக் கூட ஒருநாள் கூத்தடிக்க 30 லட்சம் செலவு பண்றதும் அதே பணக் கொழுப்பு தான். இதை எல்லாம் விக்ரமை வைச்சி பச்சத் தண்ணிப் பல்லுல படவிடாம வேர்க்க விறுவிறுக்க வசனம் பேச வைக்கிறதும் சரிதானுங்க.
அதிக பட்சம் 3 கோடி ரூவாய்ல எடுக்க வேண்டிய படத்தை 50 கோடி(70 கோடின்னும் சொல்றாங்க) ரூவாய் செலவழிச்சி எடுத்திங்களாமே. 47 கோடி வச்சி எத்தனை ஆயிரம் குழந்தைகள் எத்தனை கிராமங்களை தத்தெடுத்திருக்கலாம்?
ஒரு பாட்டுல ஸ்ரேயா போடறதுக்கு ( கவனமாகப் படிக்கவும் ) 15 லட்ச ரூவாய்க்கு துணி தெச்சிக் குடுத்திங்களாமே( அது தச்சி குடுத்ததா பிச்சிக் குடுத்ததா). பத்தாயிரம் ரூபாய்ல தெச்சிருந்தாலே மொத்த ஒடம்பையும் மூடற அளவுக்கு இருந்திருக்குமே. 15 லட்சம் செலவழிச்சும் பாதி தானே மூட முடிஞ்சி இருக்கு. ஊர்ல எம்புட்டோ பேரு மானத்தை காப்பாத்திக்கவே துணி போட முடியாம கஷ்டப் படும் போது இந்த புள்ளைக்கு பாதியை மறைக்கவே 15 லட்சம் செலவு தேவையா? அதை வச்சி ஒரு 150 குழந்தைகளை படிக்க வச்சிருக்கலாம் இல்லையா?
இது ஒரு மெசேஜ்( இப்டி தானே சொல்வீங்க) சொல்ற படம் தானே. இதுக்கு எதுக்கு பாட்டு. அட போட்டதும் போட்டிங்க. இவ்ளோ பாட்டுத் தேவையா? ஒரு பாட்டு முடிஞ்சி அடுத்த சீன் வரும் போது முந்தைய சீன் மறந்துப் போய்டுது. ( அதுக்கு ஸ்ரேயா தான் காரணம்னு நீங்களா புரிஞ்சிகிட்டா நான் என்ன செய்றது? ) . அவ்ளோ குறைந்த இடைவெளிகள்ல பாட்டு போட்டுக் கொல்றிங்க. இதுக்கு ஒலகம் பூரா சுத்தி சுத்தி படம் புடிச்சி இருக்கிங்க. இந்த வகைல சில பல கோடிகள் வீண். இதை வச்சி எவ்ளோ பேரை தத்தெடுத்திருக்கலாம்?
இப்போலாம் புதுப் பசங்க நடிக்கிற படங்கள் தான் சக்கைப் போடு போடுது. இதுமாதிரி கருத்து கந்தசாமி படத்துக்கு பெட்ரமாஸ் லைட்டே தான் வேணுமா? இந்த பந்தம் எல்லாம் கொளுத்திக்கக் கூடாதா? புதுசா யாரையாச்சும் நடிக்க வச்சிருக்கலாம்.முதல்வன் படம் ரஜினி நடிக்காம அர்ஜுன் நடிச்சும் ஹிட்டாச்சிங்க்ணா. விக்ரமுக்கு 5, 6 கோடியாச்சும் குடுத்திருப்பிங்க.
இப்டி படத்துக்கு/துல நீங்க பண்ணி இருக்கும் வெட்டி செலவே பல கோடிகள். இதுக்கு என்னப் பேரு? பணக் கொழுப்பா? இல்லை ..பக்கத்து வீட்டுக்காரன் நெய்யே.. என் பொண்டாட்டிக் கைய்யே என்று பூந்து விளையாடினிங்களா?. அடுத்தவன் காசுதானே.. உங்களுக்கென்ன?. நஷ்டம் வந்து சமாளிக்க முடியாம போச்சினா அவங்க தானே தற்கொலை பண்ணி சாவப் போறாங்க.
சமுதாயத்துல தொழிலதிபர்கள் மட்டும் தான் இப்டி அநியாயமா சம்பாதிச்சி , செலவு செஞ்சி, வெளிநாட்ல பணத்தை பதுக்கறாங்களா?அதிக பட்சம் 60 நாள் கால்சீட்டுக்கு கோடிகோடியா ( 25 கோடி வரைக்கும் கூட) வாங்கற நடிகனும், பாட்டுக்கு மட்டும் வந்து பாதி துணில குத்தாட்டம் போட்டு பல லட்சங்கள் முதல் சில கோடிகள் வரை வாங்கும் நடிகையும் புனித பிம்பங்களா? அது ஏன் எந்த சினிமாவுலையும் இந்த கும்பலைக் கண்டுக்கறதே இல்ல?
கொய்யாலே.. கேக்கறவன் கேணப் பயலா இருந்தா கருணாநிதியும் ஜெயலலிதாவும் குட் ஃப்ரண்ட்ஸ்னு சொல்விங்க போல இருக்கே. சத்தமே இல்லாம தங்களோட மாத வருமானத்தை வச்சி முடிஞ்ச அளவு சேவை செய்ற நடுத்தர வர்க்கத்தை பத்தி யாராச்சும் எடுத்து சொல்லி இருக்கிங்களா?.. மெசேஜ் சொல்றாங்களாமா மெசேஜ்.
வெளிய வரும்போது படத்தோட டைட்டில் சாங் கேட்டுச்சி.. நொந்த நொந்த நொந்த நொந்த நொந்தசாமி....





