எப்படி நன்றி சொல்வது?

கிருஷ்ணகிரி செல்வதற்கு ஒரு நாள் முன்பு, கும்கியிடம் தெரிவித்தேன். வருவதற்கான காரணமும் சொன்னேன். அடுத்த நொடி” பாஸ், என் பைக் எடுத்துக்கோங்க. அப்போ தான் 4 மணிக்குள்ள உங்க வேலை முடியும்”. நான் செல்ல வேண்டிய பகுதிகளை தெரிந்து தான் இதை சொன்னார். அதில் பல ஊர்களுக்கும் பேருந்து வசதியே இல்லை. சாலைகள் மிகக் கொடுமையானது. அடுத்தநாள் கிரிஷ்ணகிரியில் தன் பைக்குடன் தயாராய் நின்றிருந்தார். வண்டியைப் பார்த்ததும் அதிர்ச்சி. வாங்கி சில நாட்களே ஆன விலை உயர்ந்த தன் புத்தம் புதிய யுனிகானை என்னிடம் கொடுத்தார். அந்த சாலைகளில் சைக்கிளில் பயணிப்பதே சிரமம். மோசமான சாலைகளில் சுமார் 150கிமீ பயணம். அவர் அலுவலகம் போவதற்காக உபயோகிக்கும் புத்தம் புதிய வண்டியை என் சவுகரியத்திற்காக கொடுத்தார். எவ்வளவு பெரிய மனசுய்யா உமக்கு..

சில நாட்களுக்கு முன் மீண்டும் அதே வேலைக்காக ஒசூர் சென்றிருந்தேன். அந்த வேலைக்கான பொருட்கள் வந்துக் கொண்டிருப்பதாகவும் ,அதை கிருஷ்ணகிரியில் பாதுகாப்பான இடத்தில் இறக்கி வைக்க வேண்டும் என்றும் அலுவலகத்தில் இருந்து திடீர்த் தகவல். மீண்டும் கும்கியைத் தொடர்புக் கொண்டு உதவி கேட்கிறோம்( நானும் நந்தண்ணாவும்) . அடுத்த நாள் காலையில் என்னுடன் இணைந்துக் கொண்டார். முதலில் தங்குவதற்கு ஒரு ஹோட்டல் அறை வேண்டும் என்பதால் அதற்கு முயற்சிக்கிறோம். அன்று முகூர்த்த தினம் என்பதால் நகரின் முக்கிய ஹோட்டல்கள் அனைத்திலும் இடம் இல்லை. பின்னர் அலைந்துத் திரிந்து ஒரு அறை பதிவு செய்துவிட்டு, பொருட்களை வைப்பதற்கான இடத்திற்காக அவருக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் தொலைபேசி உதவி கேட்கிறார். அவரது உறவினர் பொறியாளர் திரு. ஆறுமுகம் அவர்களுக்கு சொந்தமான ஒரு இடத்தை ஏற்பாடு செய்துக் கொடுத்தார். இந்த வேலைகளுக்காக சுமார் 3 மணி நேரம் அவர் நேரத்தை செலவிட்டார்.

அன்று மாலை நண்பர் மேடியின் திருமணத்திற்கு ஈரோடு செல்ல வேண்டும் என்பதால் தன் அலுவல் பணிகளை எல்லாம் விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. அவரது உயரதிகாரி கண்டிப்பானவர் மட்டுமல்லாமல் மிகவும் தண்டிப்பானவரும் கூட. ஆனாலும் கூட அவர் என்னவோ கூலாகத்தான் இருந்தார். எனக்குத் தான் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருபப்து போல் வேதனை. தொந்தரவு செய்ததற்கு மன்னிச்சிடுங்க கும்கி. அன்றைய உங்கள் சூழ்நிலையில் நீங்கள் செய்தது உதவி இல்லை. தியாகம். என்றும் மறக்க மாட்டேன். நீங்கள் இல்லாமல் இருந்தால் அந்த வேலை முடிந்திருக்காது. உங்கள் நட்பிற்கு என்ன தவம் செய்தேனோ..

நண்பர் மேடியின் திருமணத்திற்காக வருவதற்கு சில நாட்கள் முன்பிருந்தே ரம்யா அககாவிடம் இருந்து அடிக்கடி போன். ஈரோட்டுப் பயணத்தின் போது கோவைக்கும் வருவதாகவும் தம்பியை( நாந்தேன் ) பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். மிக்க பாசமான அக்கா என்பதால் நானும் ஆவலாகக் காத்துக் கொண்டிருந்தேன். விதி விளையாடிவிட்டது. மேலே சொன்ன வேலைகளுக்காக கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுப் பயணத்திற்கு சென்றாக வேண்டியதாகிவிட்டது. இதை சொன்னதும் “ என்னடா தம்பி, புள்ள தனியா இருக்கேன்னு உனக்காக வத்தக் குழம்பு, பூண்டு ஊறுகாய் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டு இருக்கேன். பார்க்க முடியலையே”ன்னு ரொம்ப வருத்தப் பட்டாங்க. அதை எல்லாம் விஜியிடம் குடுத்துட்டுப் போய் இருக்காங்க. வந்து பார்த்தேன். அம்மாடீஈஈஈஈஈஈஈஈஈஈ. எவ்ளோ வாங்கி வந்திருக்காங்க. ஃப்ரிட்ஜ் நிரம்பிடிச்சி. அதை எல்லாம் எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கும்ப் போது, ஏனென்று சரியாகத் தெரியவில்லை , கண்ணீர் முட்டியது. நன்றி சொல்வது உங்களுக்கு பிடிக்காது என்பதால் மட்டுமில்லை , உங்கள் பாசத்தை அந்த வார்த்தையால் ஈடு செய்யவும் முடியாது என்பதால் நன்றி சொல்லவில்லை அக்கா. சொல்லிப் புரியவைக்க முடியாத சந்தோஷத்தில் இருக்கிறேன். உங்கள் பாசத்திற்கு என்னத் தவம் செய்தேனோ..

கோவைக்கு வந்து இரண்டு ஆண்டுகள் வரையிலும் இங்கு எனக்கு நண்பர்களே கிடையாது. வியாபாரத் தொடர்புகள் மட்டுமே. ஆனால் இப்போது ,
அண்ணாச்சி வடகரை வேலன் குடும்பத்தார்,
விஜி ராம்கோபால் குடும்பத்தார்,
மஞ்சூர் ராசா அண்ணா குடும்பத்தார்,
தாரணி அக்கா ஆகியோர் என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவனாகவே நடத்துகிறார்கள். நான் இங்கு தனியாக வாழும் உணர்வே இல்லை. இவர்களின் அன்புக்காக எல்லாம் நான் என்ன தவம் செய்தேனோ?

டிஸ்கி: மேலே குறிப்பிட்டிருப்பது அனைத்தும் பதிவுலகத்தால் மட்டுமே எனக்கு சாத்தியமானது. பதிவுலகத்திற்கு வராமல் இருந்திருந்தால் இந்த உறவுகளை எல்லாம் அடைந்திருக்க முடியாது. கோவையைத் தாண்டியும் இன்னும் ஏராளமான உறவினர்கள் இந்த பதிவுலகத்தால் எனக்குக் கிடைத்திருக்கிறார்கள்.

டிஸ்கி2 : பதிவுகள் எழுதுவதால் ஒரு பலனும் இல்லை என்று அவ்வப்போது சிலர் புலம்பி எழுதுவதைப் பார்த்தால் அவர்கள் மேல் அனுதாபம் தான் எற்படும். பாவம், அதிர்ஷ்டம் இல்லாதவர்கள். நான் பெரும் அதிர்ஷ்டசாலி.

டிஸ்கி3 : எழுதுங்கள் என் பின்னூட்டத்தில்.. இவன் பெரும் அதிர்ஷ்ட்டக்காரன் என்று. :)

Read more...

சச்சின் சேனா தேசியம்


வர வர நாட்ல கொசுத்தொல்லைகள் அதிகமாய்ட்டே வருது. திராவிடக் கொசுக்கள் தங்கள் வியாபாரம் நல்லா கல்லா கட்ட ஆரம்பிச்சதும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாம அனைத்திந்திய மற்றும் நாங்களும் தேசியவாதிகள் தான் என்று திருந்திட்டாங்க. ஆனா சிலர் இன்னும் அதையே பிடிச்சி தொங்கிட்டு இருக்காங்க. சச்சின், தான் ஒரு இந்தியன் என்று சொல்லிவிட்டாராம். அதற்கு பால் தாக்கரே , ”தம்பி, விளையாட்டை மட்டும் கவனித்தால் போதும். அரசியல் பேசாதே. மும்பையை அடைய எத்தனை உயிர்கள் பலியானது தெரியுமா? அப்போ நீ பொறக்கவே இல்லை” என்றெல்லாம் சவுண்டு குடுத்திருக்கிறார். நாங்க எல்லாம் தீக்குளிச்ச தொண்டன் மேல சந்தியம் செஞ்சி அது மறக்கறதுக்குள்ள பழய எடத்துக்கே போய் அண்ணன் ஒரு கோயில் என மணி அடிப்பவர்கள். இவர் இன்னும் பழைய பல்லவி பாடிட்டிருக்கிறார்.

யார் எதை மட்டும் செய்ய வேண்டும் என்றேல்லாம் தீர்மானிக்கும் அதிகாரம் இவர்களுக்கு யார் கொடுத்தார்களோ?. சச்சின், கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும், அரசியல் ஆசை இருக்கக் கூடாது என சொல்லி இருக்கிறார் தாக்கரே. ஒருவர் அரசியலுக்கு வரலாமா கூடாதா என்றேல்லாம் இவர் கட்டளை இடுவது செம காமெடி. இதையே தமிழ்நாட்ல சொல்லி இருந்தா அவ்வளவு தான். ரணகளம் ஆகி இருக்கும்.

நாங்கல்லாம் ஒரே ஒரு சீன்ல ”சார் போஸ்ட்”னு சொன்ன அடுத்த வினாடி அடுத்த தேர்தல் தேதியை சொல்லி முதல்வர் நாற்காலியை ரிசர்வ் பண்றவங்க. அப்படி இருக்கும் போது பெரிய விளையாட்டு வீரர் அரசியலுக்கு வரக் கூடாதா?.

சச்சின், தான் ஒரு மராத்தியராக புகழ் பெறவில்லை. இந்தியராகத்தான் பல சாதனைகள் புரிந்திருக்கிறார். இந்திய அணிக்காக விளையாடித்தான் பெரும் புகழைப் பெற்றிருக்கிறார். இந்திய விளையாட்டுத் துறையின் மிகவும் நேசிக்கத் தக்க வீரர் அவர். ஆகவே தான் ஒரு இந்தியன் என்று சொல்வதில் சச்சினோடு சேர்ந்து அனைத்து இந்தியர்களுமே பெருமை அடைகிறோம். இதைக் கூடவா கண்டிக்கனும்?.

ஏற்கனவே தன் அண்ணன் மகன் நவநிர்மான் சேனாவை ஆரம்பித்து மராட்டிய அரசியல் களத்தின் பால்தாக்கரேவின் பியூஸ்களை எல்லாம் புடுங்கிக் கொண்டிருக்கிறார். ”மராத்தி மட்டும்” என்ற போலியான கோஷத்தை வைத்துக் கொண்டு தோல்வி மேல் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார் தாக்கரே. இந்நிலையில் டெண்டுல்கரை கண்டிப்பது மேலும் சிக்கலைத் தரும். மேற்கு வங்கத்தில் கங்குலியும் மஹாராஷ்ட்ராவில் டெண்டுல்கரும் அரசியல் தலைவர்களுக்கு இணையான/மீறிய செல்வாக்குக் கொண்டவர்கள். அவர்களை சீண்டிப் பார்ப்பது தனக்குத் தானே குழி வெட்டுவது போலத்தான்.

இனம், மொழி என்ற குறுகிய வட்டத்துக்குள் ’மட்டுமே’ சிந்திப்பதை நிறுத்தும் வரையில் அமைதியான வாழ்க்கை சாத்தியமே இல்லை.

டிஸ்கி1: பால்தாக்கரே டெண்டுல்கரை விமர்சிக்கவில்லை, வயதில் மூத்தவர் என்ற முறையில் டெண்டுல்கருக்கு அறிவுரை மட்டுமே சொன்னதாக சிவசேனா விளக்கமளித்திருக்கிறது.

டிஸ்கி2: எங்கும் மராத்தி எதிலும் மராத்தி என்று கூவும் ராஜ்தாக்கரே கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பெரும்பாலானோரின் குழந்தைகள் ஆங்கில வழியில் தான் படிக்கின்றனராம். ராமதாஸ், கருணாநிதி எல்லாம் உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு கொம்பேனி பொறுப்பேற்காது.

டிஸ்கி3 : மலையாளம் எழுத/படிக்க/பேசத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே கேரள அரசுத் துறையில் பணிபுரிய வாய்ப்பளிக்கப் படும் என கேரள முதல்வர் அச்சுதானந்தம் தெரிவித்துள்ளார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எனும் தேசியக் கட்சியை சார்ந்தவர். தேசிய ஆட்சி மன்றக் குழுவிலும் இடம் பெற்றிருக்கிறார். செவப்பு சாயம் வெளுத்துப் போச்சி.. டும்..டும்..டும்..டும்..

டிஸ்கி4: மிஸ்டர் சச்சின், எப்போ இடத்தை காலி பண்ணப் போறிங்க?. சமீக காலங்களாக ஒன்றிரண்டு மேட்ச்களில் மட்டும் நன்றாக விளையாடிவிட்டு மற்ற சமயங்களில் இடத்தை அடைத்துக் கொல் கிறீர்கள். வழிவிட்டால் இன்னும் பல திறமைசாலிகள் கிடைப்பார்களே. மனசு வைங்க சார்.

Read more...

நெஞ்சை பிசையும் செய்தி

நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நிலை என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை. இவர்களின் வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் இந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களின் நிலையை நினைத்தால் மனது வலிக்கிறது. கடலுக்கு சென்ற மீனவர்கள் அனைவரும் நலமுடன் திரும்ப வேண்டும்.. வானிலை மையம் எச்சரிக்கத் தவறியதா அல்லது எச்சரிக்கை மீறிச் சென்று புயலில் சிக்கினார்களா என்ற ஆராய்ச்சிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு , உயிரை பணயம் வைத்து குடும்பத்திற்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் அனைவரும் நலமுடன் திரும்ப வேண்டும் என்பதே இப்போதைக்குத் தேவை.. அனைவரும் நலமுடன் திரும்புவார்கள் என நம்புவோம். நம்பிக்கையை பொறுத்து வேண்டுதலோ ப்ரார்த்தனையோ செய்யலாம்.

Read more...

இலவச டிவி திட்டம் - யாருக்கு பயன்? - 3

எனக்குத் தெரிந்தவரையில் போட்டியே இல்லாத ஒரு தொழில் என்றால் அது டிவி கேபிள் இணைப்பு வழங்குவது தான். எந்த ஏரியாவிலாவது ஒரு தெருவில் இரண்டு ஆபரேட்டர்கள் இயங்குவதுண்டா?. ஒருவர் மட்டும் தான் இருப்பார். அவர் வைத்தது தான் சட்டம். அவர் சொல்வது தான் கட்டணம். எந்த சேனலை நாம் பார்க்க வேண்டும் என்பது கூட அவர் விருப்பமாகத்தான் இருக்கிறது. எந்த சேனல் நன்றாகத் தெரியவேண்டும், எந்த சேனல் மோசமாகத் தெரிய வேண்டும் என்பதெல்லாம் அவர்களின் முடிவு தான்.

இவர்களை இயக்குவது மாறன் ப்ரதர்ஸ் தான். பெரிய தொலைகாட்சி நெட்வொர்க்கின் உரிமையாளர்களான அவர்கள் தங்கள் போட்டியாளர்களை ஒழிக்க இந்த வழியைத்தான் பயன்படுத்துகிறார்கள். கடந்த தீபாவளிக்கு ஜீ தமிழ் வாங்கி இருந்த சுப்ரமணியபுரம் படத்தை அதே நாள் அதே நேரத்தில் சன் டிவி ஒளிபரப்ப முடிந்ததற்கு காரணமும் இது தான் என்று கேபிள் சங்கர் எழுதி இருந்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்தத் திட்டம் அறிவிக்கக் காரணமே ஓட்டு வாங்குவதுடன் தங்கள் கேபிள் வியாபாரத்தையும் பெருக்குவது தான். பின்னர் பேரன்களுடன் பிணக்கு ஏற்பட்டதும் கலைஞர் டிவி ஆரம்பித்து அரசு கேபிள் என்ற நிறுவனமும் ஆரம்பிக்கப் பட்டது. கிட்டத்தட்ட மாறன் சகோதரர்களின் சுமங்கலி கேபிள் நெட்வொர்க் அழியும் நிலைக்கு சென்றது. சுமங்கலி இருந்த இடமெல்லாம் அரசு கேபிள் ஆக்கிரமித்தது. மதுரையில் அழகிரியின் ராயல் கேபிள் விஷன் சுமங்கலியை காலி செய்தது. பின்னர் மீண்டும் தாத்தாவுக்கும் பேரன்களுக்கும் கண்கள் பணித்து இதயம் இனித்ததில் மீண்டும் சுமங்கலி தன் ஆக்டோபஸ் முறையை தொடர்ந்தது. ராயல் கேபிள், அழகிரியின் நிறுவனம் என்பதால் இன்னும் தொடர்கிறது.

ஆனால் அரசு கேபிள்..? வேற என்ன.. சாவு மணி அடிக்கப் பட்டுவிட்டது. அதற்காக ஆக்கிரமிக்கப் பட்ட அலுவலகங்கள் எல்லாம் சுவடே இல்லாமல் அழிக்கப் பட்டுவிட்டன. சுமங்கலியால் இணைப்பு வழங்கப் பட்ட போது 175 ரூபாயாக இருந்த கேபிள் கட்டணம் அரசு கேபிளால் 100 ரூபாயாக குறைக்கப் பட்டது. பின்னர் சுமங்கலியே தொடர்ந்ததும் கட்டணம் 150 ரூபாயாக உயர்ந்துவிட்டது. நான் 100 ரூபாய்க்கு மேல் தர முடியாது என்று சொல்லிவிட்டேன். ஒவ்வொரு முறையும் கட்டண அட்டையில் 50 ரூபாய் பாக்கி என குறித்து செல்கின்றனர். :)

வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் கஷ்டத்தை விட சில கேபிள் ஆபரேட்டர் படும் துன்பங்கள் சொல்லி மாளாது. அரசு கேபிள் ஆரம்பிக்கும் போது பலரும் சுமங்கலியில் இருந்து பிரிந்து அரசு கேபிளில் இணைத்துக் கொண்டனர். இப்போது வேறு வழி இல்லாமல் சுமங்கலியுடனே இணைய வேண்டிய நிர்பந்தம். ஆனால் இவர்கள் பிரிந்து சென்ற சுமார் 5 மாதங்களுக்கான நிலுவைத்தொகையைக் கட்டினால் மட்டுமே இணைப்பு வழங்கப் படும் என சுமங்கலி நிறுவனல் சொன்னதாம். இதனால் 5 மாத பெரும் நிலுவைத்தொகையை செலுத்த முடியாமல் பலரும் தங்கள் நிறுவங்களை சுமங்கலிக்கே விற்றுவிட்டனர். எங்கள் ஏரிய ஆபரேட்டர் உட்பட.. இன்று அவர்கள் நிலை பரிதாபத்தில் இருக்கிறது.

அரசாங்கம் அறிவித்து செயல்படுத்தும் இலவச தொலைக்காட்சித்திட்டத்தால் வேறு என்ன விளைவுகள்?
கிராமங்களில் இன்னும் முழுமையாக கேபிள் இணைப்புகள் இல்லை. இருக்கும் சில இடங்களிலும் பகையாலும் பொறாமையாலும் கேபிள்கள் அறுக்கப் படுகின்றன. அதனால் மக்கள் முழுமையாக கேபிள இணைப்பை பயன்படுத்தாமல் இருந்தனர். இந்த நேரத்தில் தான் DTH ஒளிபரப்பு துவங்கப்பட்டது. இதில் மாறன் குடும்பத்தின் சன் டைரக்டும் தன் ”சேவை”யைத் துவங்கியது. எப்போதும் அடித்தட்டு மக்களை குறிவைக்கும் மாறன் குடும்பம் இதிலும் தன் திறமையைக் காட்டியது. மற்ற நிறுவங்கள் எல்லாம் அதிக சேனல்களுடன் பெரும் கட்டணங்களை நிர்ணயித்து சந்தைக்கு வந்தது. ஆனால் சன் டைரக்ட் மட்டும் தங்கள் தொலைகாட்சிகள் அனைத்தும் அடங்கிய பேக்கேஜ் மற்றும் சில தமிழ் சேனல்களுடன் 70 ரூபாய் ஆரம்பம் என்ற அளவில் குறைந்த கட்டணத்தை நிர்ணயித்தது. கிராம மக்களை பொறுத்தவரை சன் நிறுவன சேனல்கள் இருந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பவர்கள். அவர்கள் ஓடோடி சன் டைரக்டை வாங்க ஆரம்பித்தார்கள்.

டிவி இல்லாதவர்களுக்கும் இப்போது இலவசமாக டிவி கிடைக்க வைத்ததால் அவர்களும் சன் டைரக்டை வாங்கிவிட்டார்கள். கேபிளோ அல்லது நேரடியாக வீட்டுக்கு ஒளிபரப்பும் தொழிலோ எதுவாக இருந்தாலும் தாங்களே ஏகபோக உரிமையாளர்களாக இருக்க வேண்டும் என்ற மாறன் குடும்பத்தின் லாபமும் மனதில் வைத்தே இந்த இலவச டிவி திட்டம் அறிவிக்கப் பட்டதாக “அரசியல் வட்டாரங்கள்” சொல்கின்றன.( விகடன்ல இலங்கை பத்திரிக்கையாளர்கள் மற்றும் இலங்கை அரசியல்வாதிகள் சொல்வாங்களே , அந்த மாதிரி)

Read more...

இலவச டிவி திட்டம் - யாருக்கு பயன்?- 2 - கோவி.கண்ணன்

ஏற்கனவே வழங்கப்பட்ட டிவிகளின் எண்ணிக்கை 85 லட்சம், அடுத்து வழங்க இருப்பது 40 லட்சம்
மொத்தமாக 120 லட்சம் அல்லது 1.2 கோடி டிவிக்கள் இன்னும் ஓர் ஆண்டில் வழங்கப்பட்டு இருக்கும் என்று வைத்துக் கொள்வோம்.
டிவிகளில் யாரும் வயலும் வாழ்வும் பார்க்க விரும்புவதில்லை, சோத்துக்கு காசு இல்லாவிட்டாலும் டிவி பார்ப்பது பொழுது போக்காகவே இருக்கிறது. இலவசமாக கொடுத்த டிவிக்கு தமிழக கருணாநிதி அரசு இலவச கேபிள் இணைப்பு தருமா ? தராது. வைத்திருக்கும் டிவியை மக்களும் அப்படியே துணி போட்டு மூடி வைக்க மாட்டார்கள். கேபிள் கணெக்சன் வாங்கனும், யாரிடம் வாங்குவது ? கருணாநிதியின் கூட்டுடன் 'சன்' நிறுவனத்தார் தவிர தமிழகத்தில் வேறு யாரும் கேபிள் கனெக்சன் கொடுத்துவிட முடியுமா ?
ஆக சன் நிறுவனத்தாரின் மாத நிரந்தரவருமானம் இனி வெறும் தொலைகாட்சி வழியாக அதுவும் தமிழக மக்களின் வரிப்பணத்தினால் தரப்படும் இலவச டிவிகளினால் எப்படி பெருகும் என்பதைப் பார்த்தால்,
1.2 கோடி இணைப்பு * 75 ரூபாய் = 90 கோடி ஒரு மாதத்திற்கு
1.2 கோடி இணைப்பு * 75 ரூபாய் * 12 மாதம் = 1080 கோடி ஒரு ஆண்டுக்கு
1.2 கோடி இணைப்பு * 75 ரூபாய் * 12 மாதம் * 5 ஆண்டு = 5400 கோடி ஐந்து ஆண்டுகளுக்கு
ஐந்து ஆண்டுக்கு கிட்டதட்ட இந்திய அரசின் தேர்தல் பட்ஜட் அளவுக்கு சன் குடும்பத்தாருக்கு இலவச தொலைகாட்சி மூலம் வருமானம் சென்று சேர்கிறது.
இவை யாவும் மக்கள் வரிப்பணத்தால் 'இலவசம்' என்ற பெயரில் செய்யப்பட்ட முதலீடு, இதில் பொதுமக்களுக்கோ, ஏழைகளுக்கோ ஒரு பைசா கூட சென்று சேராது.
இலவச டிவி வழங்குவதின் நீண்ட காலப் பயன் இதுவே.
வாழ்க திமுக அரசு ! வளர்க்க சன் குடும்பம் ! வாழ்க இலவச டிவி திட்டம் !

எழுதியவர் : கோவி.கண்ணன்
(நண்பர் நாகராஜன் திவாகர் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலின் விரிவாக்கம்)

டிஸ்கி: இந்தப் பதிவை நான் முழுமையாக ஒத்துக் கொள்வதால் அவர் விருப்பப் படி என் வலைப்பூவில் வெளியிடுகிறேன். மேலும் , இது தொடர்பான என்னுடைய இன்னொரு பதிவு நாளை.. கேபிள் தொழில் - ஆதாயம்- பாதிப்பு என கலந்துக் கட்டி அடிக்கலாம். :)

Read more...

இலவச டிவி திட்டம் - யாருக்கு பயன்?

நிறுவனங்களுக்கும் வழங்கப் பட்ட பணம்,
14/02/2007 அன்று 685,00,00,000/-
28/01/2008 அன்று 659,10,00,000/-
25/03/2008 அன்று 93,37,25,000/-
02/09/2008 அன்று 71,40,25,000/-

மொத்தம் : 1508,87,50,000/-

கடந்த வாரம் டெண்டர் கோரப்பட்டிருக்கும் எண்ணிக்கை : 40 லட்சம்
40 லட்சத்திற்கும் தோராயமான செலவு : 800 கோடி
ஏற்கனவே செலவ(ழி)ளித்த தொகை 1500 கோடி
மொத்தம் : 2300 கோடி

இது வரை விநியோகிக்கப் பட்ட எண்ணிக்கை : 85,15,343.

இதெல்லாம் என்னன்னு யோசிக்கிறிங்களா? வேற ஒன்னுமில்லீங்க. தமிழக அரசால் வழங்கப் படுல் இலவச வண்ணத்தொலைகாட்சித் திட்டத்திர்கான செலவுகள் மற்றும் வழங்கப் பட்ட டிவிக்களின் எண்ணிக்கை தானுங்க.

அரசாங்கக் கணக்குப் படி இது வரை 85 லட்சத்திற்கும் மேல் இலவச தொலைகாட்சி பெட்டிகள் விநியோகிக்கப் பட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்த குடும்ப அட்டைகள் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சம் எனத் தெரிகிறது. ஆகவே இன்னும் 35லட்சத்திற்கும் குறைவான டிவி வாங்கினாலே போதுமானது. ஆனால் அடுத்த தவணையாக 40 லட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மீதி 5 லட்சம் டிவிக்கள் என்ன செய்வாங்கன்னு தெரியலை. இதற்கெல்லாம் மொத்தம் 2300 கோடிகளுக்கு மேல் பணம் செலவாகிறது. இந்த இலவச தொலைகாட்சிகளால் என்ன பயன் என்றே தெரியவில்லை. இதன் மூலம் கூடுதல் மின் உபயோகம் தான் செலவாகிறது. அதற்கேற்றவாறு மின் உற்பத்தி திட்டம் எதுவும் நிறைவேற்றப் படவில்லை. ஏற்கனவே தொழில் துறை வளர்ச்சியைக் கருத்தில்க் கொண்டு மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்தாதலாம் தினமும் குறைந்தபட்சமாக இரண்டு மணி நேரம் மின் தடை அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் டிவிக்களால் கூடுதல் மின் உபயோகமும் சேர்ந்துள்ளது. இதன் மூலம் சோம்பேறிகளை உறுவாக்கியதோடு , இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் விதம் மகா கேவலமாக உள்ளது.

அனைவருக்கும் இலவசமாக டிவி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

இதற்கு முன் யார் வீட்டிலுமே டிவி இருந்ததில்லையா?

காசு கொடுத்து டிவி வாங்கும் நிலையில் தமிழகத்தில் யாருமே இல்லையா?

எற்கனவே தொலைக்காட்சி வைத்திருப்பவர்களுக்கும் இலவசமாக கூடுதலாக ஒரு டிவி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

இந்த 2300 கோடி ரூபாயை இப்படி விரயம் செய்ததற்கு பதில் ,
  • இதை வைப்பு நிதியாக வைத்து, அதில் வரும் வட்டியின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அதிக மதிப்பெண் எடுத்தும் படிப்பைத் தொடர முடியாத ஏழை மாணவர்களின் கல்விக்கு செலவிடலாம்
அல்லது
  • மின்சாரம், சாலை, மருத்துவ வசதி இல்லாத ஆயிரக் கணக்கான கிராமங்களில் பெரும்பாலானவற்றிற்கு இந்த வசதிகளை செய்து தரலாம்.
அல்லது
  • இருக்க வீடில்லாமல் ப்ளாட்பாரங்களிலும் மரத்தடியிலும் வசிக்கும் குடும்பங்களுக்கு சிறிய அளவிலான வீடு கட்டிக் கொடுக்கலாம்.
அல்லது
  • அனைத்து வசதிகளும் கொண்ட சர்வதேசத் தரத்திலான பல்கலைக் கழகம் அமைக்கலாம்.
அல்லது
  • போக்குவரத்து வசதி இல்லாமல் கட்டிலில் நோயாளிகளை சுமந்துக் கொண்டு பல மைல் தூரம் நடந்து செல்லும் அவல நிலையில் உள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி செய்துக் கொடுக்கலாம்.

இப்படி எல்லாம் எதுவும் செய்யாமல் 2300 கோடி ரூபாய் வீணாக அதிமுக, மதிமுக தவிர (இவர்களும் கூட அரசியல் காரணத்திற்காக தான், மக்கள் நலனால் அல்ல) சட்டசபையில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்டுகள் என அனைத்து கட்சியினரும் துணைப் போகிறார்கள்.
இத்திட்டம் முதலில் வண்ணத்தொலைகாட்சி இல்லாதவர்களுக்கு என்றார்கள். பின்னர் அரசு அலுவலர்களுக்கும் இல்லை என்றார்கள். இப்போது குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் என்கிறார்கள். ஏற்கனவே ஒரு பதிவில் கேட்டது தான் இப்போதும் கேட்கிறேன். குடும்ப அட்டை வைத்திருக்கும்

அனைவருக்கும் டிவி பார்க்க மின்சார வசதி இருக்கிறதா?
அல்லது மின் இணைப்பு இருக்கும் குடும்பங்களுக்கு மட்டும் தான் குடும்ப அட்டை வழங்கப் பட்டிருக்கிறதா?

அடுத்த கட்டமாக வாங்கப் படும் 40 லட்சம் டிவிக்களும் வரும் 2010 டிசம்பர் வரை வழங்கப் படும். 2011ல் தேர்தல் என்பது இங்கு தேவை இல்லாத தகவல்.

இதைப் படிக்கும் அனைவரும் இது போல் எதாவது ஒரு பிரச்சனையை மையமாக வைத்து ( ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிடக் கூடாதுன்னு தான் ) ஒரு பதிவு எழுதுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். அரசியல் சார்ந்ததா தான் இருக்கனும்னு அவசியல் இல்லை. எழுதிவிட்டு இணைப்பு குடுங்க. நாம் கவலைப்படும் அளவில் எவ்வளவுப் பிரச்சனைகள் இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்.

Read more...

தைரியம் இருந்தா வந்து பாருங்க

என்னைப் பிடிக்காதவங்க ஏராளமா இருக்காங்க. எனக்குப் பிடிக்காதவங்க யாருமே இல்லைங்க..
(போதும்டா வெண்ண.. விஷயத்துக்கு வா..)

வலையுல ஆச்சி(மசாலா இல்ல)யும் பப்பு டைம்ஸ் எடிட்டர் இன் சீஃபுமான சந்தன முல்லை ஒரு தொடர் பதிவுக்கு அழைப்பு விடுத்திருக்காங்க. ஏற்கனவே சில அழைப்புகள் பெண்டிங்கல இருக்கு. அவங்களும் ரொம்ப வேண்டியவங்க வேற. என்ன நடக்கப் போகுதோ.. இது ரொம்ப சின்ன பதிவு என்பதால்( மொக்கை போட்டு பெரிசாக்கிட்டு இருக்கேன் பாருங்க) முதலில் எழுதிவிடுகிறேன்.. பிறகு மற்றவர்களுக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும். அது வரை மன்னிக்க.

பிடிக்காதவர்கள் பட்டியலில் இருப்பவர்களிடம் பிடிக்காதது அவர்கள் துறை சார்ந்த செயல்களால் மட்டுமே. தனிப்பட்ட வாழ்விற்காக இல்லை.

1.அரசியல் தலைவர்
பிடித்தவர் :காமராஜர் - நம் கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்துக்கு காரணம்.
பிடிக்காதவர்: எம்ஜிஆர் - இலவசங்களை குடுத்து ஏமாற்றும் வித்தையை அறிமுகப் படுத்தியதோடு கல்வி நிறுவன உரிமைகளை ஜால்றாக்களுக்கு குடுத்து வியாபாரம் ஆக்கியவர்.

2.எழுத்தாளர்
பிடித்தவர் : சுஜாதா - சுவாரஸ்யமாக இருக்கும்.
பிடிக்காதவர் : பாலகுமாரன் - கதைகள் படிக்கும் பழக்கத்தை விடக் காரணமே இந்த புண்ணியவான் தான். இவரைப் படிப்பவர்கள் பெரும் ஞானிகள் என்பது என் தாழ்மையானச் கருத்து.

3.கவிஞர்
பிடித்தவர் : கண்ணதாசன் - அனுபவத்தை அற்புத வரிகளாக்கியவர்..
பிடிக்காதவர் : கண்ணதாசன் - ஓவர் பில்டப் குடுத்து சிலரை வளர்த்துவிட்டவர். குறிப்பாக எம்ஜிஆரை. ( பிடிக்காதவ்ர்கள் பட்டியல் ரொம்பப் பெரிசு இதுல மட்டும் )

4.இயக்குனர்
பிடித்தவர் : மணிரத்னம் - பொழுது போக்கிற்கு இடையே எப்போதாவது கருத்து சொல்வார்.
பிடிக்காதவர்: சேரன் - தன் இஷ்டத்துக்கு படம் எடுத்து பிறர் உயிரை வாங்குவார்.

5.நடிகர்
பிடித்தவர் : கமல்ஹாசன் - சகலகலாவல்லவன்..
பிடிக்காதவர் : பிரகாஷ்ராஜ் - சிவாஜிக்கு பிறகு மிகை நடிப்பின் சூப்பர்ஸ்டார். சிவாஜியாவது மேடை நாடகம் மூலம் வந்தவர். இவருக்கென்ன?

6.நடிகை
பிடித்தவர் : ஜோதிகா ( நமீதாவும் தான் ) - மொழி தெரியாமலே பாவனைகளில் பின்னி பெடலெடுப்பார்.. மொழியிலும் கலக்கியவர்.. ( நமீதா.... ஹிஹி.. என் ஆசை மச்சான் )
பிடிக்காதவர் : திரிஷா ( முன்னனி நாயகர்களுடன் ****ஆடுவது மட்டுமே நோக்கம். நடிப்பு பற்றி அக்கறை இல்லை.)

7 . இசையமைப்பாளர்
பிடித்தவர் : ஏ.ஆர்.ரஹ்மான் , இளையராஜா - முணுமுணுக்க வைக்கும் இசைக்கு சொந்தமானவர்கள்.
பிடிக்காதவர் : தேவா - காப்பி பேஸ்ட் ஸ்பெஷலிஸ்ட். காப்பி கடையோ சாஃப்ட்வேர் கம்பெனியோ நடத்தி இருக்கலாம்.

இந்த தொடரை தொடர அழைப்பது- ஒசாமா பின்லேடன், இந்துகுஷ் மலை, ஆப்கானிஸ்தான் மற்றும் என் கே கே பி ராஜா , பெங்களூர் அல்லது கேரளா.

( மீண்டும் தலைப்பைப் படித்துக் கொள்ளவும்)

Read more...

பருத்திக் காடு - விவசாயம்

ஹாய் மக்கள்ஸ், நெல் பத்தி எழுதினது ரொம்ப பேருக்கு பிடிச்சிருந்தது. அவ்ளோ பெரிய பதிவு.. அதுவும் விவசாயம் பத்தின பதிவு படிப்பாங்களோ இல்லையோ.. சும்மா எழுதி வைக்கலாம்னு எழுதினேன். ஆனால் அமோக வரவேற்பு. ரொம்ப சந்தோஷம். அதே சந்தோஷத்தோட இப்போ பருத்தி பத்தி எழுதறேன்.

முதலில் நன்றாக உழுது நிலத்தை தயார் பண்ணிடுவாங்க. அப்புறம் விதை மையங்களில் பருத்திக் கொட்டை (விதை) வாங்கிவந்து நடுவோம்.
வயலின் இரு எல்லைகளுக்கும் எட்டும் வகையில் நீளமான ஒரு கயிறில் இரண்டு அடி இடைவெளிவிட்டு சிறு சிறு துணிகளை இடையில் திணித்துவைத்துக் கொள்வோம். கயிறின் இரண்டு முனைகளையும் ஆளுக்கொருவராகப் பிடித்துக் கொண்டு வயலின் இரண்டு எல்லைகளிலும் இருவர் நின்றுக் கொள்வார்கள். பருத்தி நட வேண்டிய வயல்களின் பரப்பளவுக்கு ஏற்ற மாதிரி கயிறுகளின் எண்ணிக்கையும் நடுபவர்களின் எண்ணிக்கையும் இருக்கும். கயிற்றில் இரண்டடிக்கு ஒரு துணி வைத்திருபப்து போல் கயிறு பிடித்திருப்பவர்களின் கையிலும் இரண்டடி நீளத்தில் ஆளுக்கொரு குச்சி வைத்திருப்பார்கள். அப்போது தான் எல்லாப் பக்கமும் இரண்டு அடி சீரான இடைவெளி இருக்கும். அவர்கள் கயிற்றை மாற்றும் போது அந்த குச்சிகளால் அளந்து அடுத்த இடத்தில் வைப்பார்கள். நடுபவர்கள் துணிகள் இருக்கும் இடத்தில் விதையை நடுவார்கள். மேலே உள்ள படத்தை பெரிசு பண்ணிப் பாருங்க. குறைந்தது 5 பேராவது பருத்தி நடுவார்கள். எல்லோரும் ஆளுக்கொரு சிறு பாத்திரத்தில் பருத்தி விதை வைத்துக் கொண்டு நடுவார்கள்.

சில ரகங்கள் ஒரு விதையும் சிலவை இரண்டு விதைகளும் நட வேண்டி இருக்கும். அதைத் தாண்டி “போக்கு” விதையும் நட வேண்டி இருக்கும். அது பிறகு. நஞ்சை புஞ்சை இரண்டிலும் பராமரிப்பு வேறு வேறாக இருக்கும். நீர்ப்பாசன வசதி இருக்கும் வயல்களில் பருத்தி விதை நட்டதும் வழக்கமான முறையில் நீர் பாய்ச்சுவார்கள். மேட்டு நிலம் என சொல்லப் படும் நீர்ப் பாசன வசதி இல்லாத வயல்களில் பருத்தி விதை நட்டதும் உடனே கையால் தான் நீர் ஊற்ற வேண்டும். சிறு வாளியில் நீர் எடுத்துக் கொண்டு தம்ப்ளர்கள் அல்லது சிறு சொம்புகள் கொண்டு நீர் ஊற்றுவோம். பருத்தி செடி ஓரளவு வளரும் வரை இப்படி நீர் ஊற்ற வேண்டும், மழைக் காலமாக இருந்தால் இது தேவை இல்லை.

[முளைத்து சில நாட்களில்]

செடி முளைத்ததும் மொத்த வயலையும் கவனிக்கனும். அதுல சில விதைகள் முளைத்திருக்காமல் பொய்த்துவிடும். அந்த இடங்களில் எல்லாம் மீண்டும் நட வேண்டும். இதற்காகவே கொஞ்சம் விதைகள் மிச்சம் வைத்திருப்போம். இதர்கு தான் போக்குக் கொட்டை( விதை) என்று பெயர்.

பிறகு கொஞ்ச நாட்களில் பருத்தி செடியின் வளர்ச்சிக்காக யூரியா, உரக் கலவைகளை போட்டு வளர்க்க வேண்டும். பிறகு புழுக்கள் வர ஆரம்பித்துவிடும். அவைகளை அழிக்க பூச்சிக் கொள்ளி மருந்துகள் பயன்படுத்த வேண்டும். அதிக வீரியமிக்க மருந்துகளை தெளித்துவிட்டு வரும் போது வீட்டிற்கு வருவதற்குள்ளேயே வழியில் வாந்தி எடுத்து சுருண்டு விழுந்திருக்கிறேன். :). பிறகு யாராவது பார்த்து அரை மயக்கத்திலேயே கைத் தாங்கலாக அழைத்து வந்து வீட்டில் விடுவார்கள். எதோ வைத்தியம் எல்லாம் செய்வார்கள். அப்போதும் தெளியவில்லை என்றால் மருத்துவமனை தான். ;). ஒடம்பு முழுக்க விஷம் பரவி இருக்கு. மனசுல தான் இல்ல,.. :))

ஓரளவு செடி வளர்ந்ததும் செடியில் அடிப்பகுதியில் மண்ணை அதிகமாக சேர்த்துவிட வேண்டும். அப்போ தான் செடிக்கு வலு சேர்க்கும். வேரும் நன்றாக மண்ணிற்குள் பரவும்.

குறிப்பாக பூ மற்றும் காய் இருக்கும் கலங்களில் அதிக புழுக்கள் வந்துவிடும். அவைகளை அழிக்க அடிக்கடி மருந்து தெளிக்க வேண்டும். இரண்டு முறைகளில் மருந்துத் தெளிப்போம். ஒன்று கை கால் பயன்படுத்தி தெளிக்கும் மெஷின். இன்னொன்று முதுகில் மாட்டிக் கொண்டு பயன்படுத்தப் படும் பெட்ரோல் மூலம் இயங்கும் தெளிபபான்.
[பருத்திப் பூ]
பருத்தி வயல்களின் ஓரத்தில் அவரை, துவரை மற்றும் ஆமணக்கு போன்ற செடிகள் பயிரிட்டிருப்போம். பருத்தியோடு சேர்ந்து அவைகளும் வளர்ந்துவிடும். வீட்டிற்கு தேவையான அவரை , துவரை மற்றும் விளக்கெண்ணை இவைகளின் மூலம் கிடைத்துவிடும். கடையில் வாங்க வேண்டி இருக்காது.
[பருத்தி வயல் ஓரத்தில் அவரை செடி]
பூக்கள் பிஞ்சியாக மாறும் போது அதில் நிறைய புழுக்கள் இருக்கும். அதை அழிப்பது கொஞ்சம் கஷ்டம். அதனால் அவைகளில் புழுக்கள் இருக்கும் பூக்களை மட்டும் பறித்துக் கொண்டு வந்து சாலையில் போட்டுவிடுவார்கள்.போகும் வரும் வாகனங்கள் எல்லாம் நசுக்கிவிட்டுப் போகும். :(
பிறகு காய்கள் பெரிதாகி வெடிக்க ஆரம்பித்துவிடும். அந்த சமயத்தில் ஆட்களை வேலைக்கு அழைத்து பஞ்சுகளை எடுத்து பைகளில் அடைத்து கொண்டு வந்து வீட்டில் கொட்டிவைப்போம்.



பின்னர் தேவையான அளவு பருத்தி சேர்ந்ததும் அவற்றை சந்தைக்கு கொண்டு செல்ல தயார் செய்யனும். இதில் நல்ல பஞ்சுகளுடன் விற்பனைக்கு உதவாத வகையிலான பஞ்சுகளும் இருக்கும். அதைத் தனியாகப் பிரித்தெடுக்கனும். இரண்டு கைகளிலும் கை நிறைய பஞ்சுகளை எடுத்து குலுக்கி உதறினால் விற்பனைக்கு உதவாத பஞ்சுகள் தனியாக அதே இடத்தில் கீழே விழும். அவைகள் கொஞ்சம் கூடுதல் எடைகளில் இருக்கும்.

பிறகு விற்பனைக்கு உகந்த பஞ்சுகளை கோணிப்பைகளில் அடைக்க வேண்டும். இது ஒரு கொடுமையான வேலை. சுமார் 10 கிலோ அளவுள்ள பஞ்சுகளை பையில் போட்டி கைவிரல்கள் கொண்டு நன்றாக குத்தி அடர்த்தியாக நிரப்ப வேண்டும். பிறகு இன்னும் கொஞ்சம் போட்டு காலை உள்ளே விட்டு பஞ்சுகளை நெருக்கமாக அடைக்கனும். பை உள்ளே எங்கும் சிறு இடைவெளிக் கூட இருக்கக் கூடாது. பிறகு பாதி பைக்கு மேல் பஞ்சு வந்ததும் 2, 3 உலக்கைகளைக் கொண்டு குத்துவோம். ஒரு பையில் பஞ்சு நிரப்ப குறைந்தது 4 பேராவது தேவை. அப்படி செய்தால் தான் ஒரு கோணிப்பையில் 50 கிலோ வரை பஞ்சுகளை அடைக்க முடியும். சந்தையில் ஒரு குவிண்டாலுக்கு( 100கிலோ) இவ்வளவு விலை என் ஏல முறையில் நிர்ணயிப்பார்கள்.

ஒரு சமயத்தில் ஒவ்வொருவரும் குறைந்தது 2 குவிண்டாலில் இருந்து அதிக பட்சம் 10 , 15 குவிண்டால் வரை சந்தைக்கு எடுத்து செல்வார்கள். அவர்கள் பருத்தி பயிரிட்டிருக்கும் பரப்பளவைப் பொறுத்தது இது. சந்தைக் கூடும் நாளுக்கு முந்தைய நாளில் எல்லோரும் பேசிவைத்துக் கொள்வார்கள். யார் எவ்வளவு பஞ்சு சந்தைக்கு கொண்டுவருவார்கள் என்று. பையில் அடைபப்தற்கு முன்பே தோராயமாக சொல்லிவிட முடியும் எவ்வளவு எடைவரை தேறும் என்று. மொத்தமாக சேரும் பஞ்சைப் பொறுத்து வாடகைக்கு லாரி பிடித்து சந்தைக் கூடுவதற்கு முந்தயை நாள் இரவே கிளம்பிவிடுவார்கள். அடுத்தநாள் காலையில் ஏலம் ஆரம்பிக்கும். பல பகுதிகளில் இருந்தும் பருத்தி வியாபாரிகள் சந்தைக்கு வந்திருப்பார்கள். இந்த சந்தைகள் கூட்டுறவுத் துறை மூலம் செயல்படும்.

ஏலம் ஆரம்பித்ததும் வரிசையாக வைத்திருக்கும் பஞ்சு மூட்டைகளின் இடையில் எங்காவது கத்தி வைத்து கிழித்து பஞ்சை எடுத்து வியாபாரிகள் பார்ப்பார்கள். ஏனெனில் பையின் மேல்ப் பகுதியில் தரமான பஞ்சும் உள்ளே தரமற்ற பஞ்சும் இருக்க வாய்ப்பு உண்டு. சிலர் தண்ணீர் தெளித்து பையில் பஞ்சை அடைப்பார்கள். எடை கூடுதலாக வர வேண்டுமென்று. இதை எல்லாம் சோதிக்கத் தான் இடையில் கிழித்துப் பார்ப்பது. பஞ்சின் தரத்தைப் பார்த்து வியாபாரிகள் ஆளுக்கொரு விலையில் கேட்பார்கள். இதில் யார் அதிக விலை கேட்கிறார்களோ அவர்களுக்கு விற்கப் படும். எல்லா பஞ்சு மூட்டைகளுக்கும் ஒரே மாதிரி விலை கிடைக்காது. அது அந்த மூட்டைகளில் இருக்கும் பஞ்சையும் விலை சொல்லும் வியாபாரியையும் பொருத்தது.

சில சந்தைகளில் அன்றே பண பட்டுவாடா நடக்கும். சில சந்தைகளில் ஒரு வாரம் கழித்து தான் பணம் கிடைக்கும். கூட்டுறவு சங்கம் மூலம் நடைபெறுவதால் பணம் பற்றிய பயம் இல்லை. அவர்கள் வியாபாரிகளிடம் பணம் பெற்றுக் கொண்ட பின் தான் பஞ்சு மூட்டைகளை கொடுப்பார்கள்.

பிறகு இவைகள் பஞ்சாலைகளுக்கு சென்று நூலாக மாறி உடையாக அவதாரமெடுத்து நமக்கு கிடைக்கிறது.

நெல் பற்றிய பதிவு ரொம்ப பெரியதாக போய்விட்டதால் உங்கள் நலன் கருதி “மிக” சுருகமாக சொல்லி இருக்கிறேன். ;)). சொல்வதற்கு இன்னும் கூட இருக்கு. ஆனால் இதுவே போதுமானது. சந்தேகங்கள் பின்னூட்டத்தில் தீர்த்து வைக்கப் படும். :)

Read more...
Powered by Blogger.

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP