எப்படி நன்றி சொல்வது?
கிருஷ்ணகிரி செல்வதற்கு ஒரு நாள் முன்பு, கும்கியிடம் தெரிவித்தேன். வருவதற்கான காரணமும் சொன்னேன். அடுத்த நொடி” பாஸ், என் பைக் எடுத்துக்கோங்க. அப்போ தான் 4 மணிக்குள்ள உங்க வேலை முடியும்”. நான் செல்ல வேண்டிய பகுதிகளை தெரிந்து தான் இதை சொன்னார். அதில் பல ஊர்களுக்கும் பேருந்து வசதியே இல்லை. சாலைகள் மிகக் கொடுமையானது. அடுத்தநாள் கிரிஷ்ணகிரியில் தன் பைக்குடன் தயாராய் நின்றிருந்தார். வண்டியைப் பார்த்ததும் அதிர்ச்சி. வாங்கி சில நாட்களே ஆன விலை உயர்ந்த தன் புத்தம் புதிய யுனிகானை என்னிடம் கொடுத்தார். அந்த சாலைகளில் சைக்கிளில் பயணிப்பதே சிரமம். மோசமான சாலைகளில் சுமார் 150கிமீ பயணம். அவர் அலுவலகம் போவதற்காக உபயோகிக்கும் புத்தம் புதிய வண்டியை என் சவுகரியத்திற்காக கொடுத்தார். எவ்வளவு பெரிய மனசுய்யா உமக்கு..
சில நாட்களுக்கு முன் மீண்டும் அதே வேலைக்காக ஒசூர் சென்றிருந்தேன். அந்த வேலைக்கான பொருட்கள் வந்துக் கொண்டிருப்பதாகவும் ,அதை கிருஷ்ணகிரியில் பாதுகாப்பான இடத்தில் இறக்கி வைக்க வேண்டும் என்றும் அலுவலகத்தில் இருந்து திடீர்த் தகவல். மீண்டும் கும்கியைத் தொடர்புக் கொண்டு உதவி கேட்கிறோம்( நானும் நந்தண்ணாவும்) . அடுத்த நாள் காலையில் என்னுடன் இணைந்துக் கொண்டார். முதலில் தங்குவதற்கு ஒரு ஹோட்டல் அறை வேண்டும் என்பதால் அதற்கு முயற்சிக்கிறோம். அன்று முகூர்த்த தினம் என்பதால் நகரின் முக்கிய ஹோட்டல்கள் அனைத்திலும் இடம் இல்லை. பின்னர் அலைந்துத் திரிந்து ஒரு அறை பதிவு செய்துவிட்டு, பொருட்களை வைப்பதற்கான இடத்திற்காக அவருக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் தொலைபேசி உதவி கேட்கிறார். அவரது உறவினர் பொறியாளர் திரு. ஆறுமுகம் அவர்களுக்கு சொந்தமான ஒரு இடத்தை ஏற்பாடு செய்துக் கொடுத்தார். இந்த வேலைகளுக்காக சுமார் 3 மணி நேரம் அவர் நேரத்தை செலவிட்டார்.
அன்று மாலை நண்பர் மேடியின் திருமணத்திற்கு ஈரோடு செல்ல வேண்டும் என்பதால் தன் அலுவல் பணிகளை எல்லாம் விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. அவரது உயரதிகாரி கண்டிப்பானவர் மட்டுமல்லாமல் மிகவும் தண்டிப்பானவரும் கூட. ஆனாலும் கூட அவர் என்னவோ கூலாகத்தான் இருந்தார். எனக்குத் தான் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருபப்து போல் வேதனை. தொந்தரவு செய்ததற்கு மன்னிச்சிடுங்க கும்கி. அன்றைய உங்கள் சூழ்நிலையில் நீங்கள் செய்தது உதவி இல்லை. தியாகம். என்றும் மறக்க மாட்டேன். நீங்கள் இல்லாமல் இருந்தால் அந்த வேலை முடிந்திருக்காது. உங்கள் நட்பிற்கு என்ன தவம் செய்தேனோ..
நண்பர் மேடியின் திருமணத்திற்காக வருவதற்கு சில நாட்கள் முன்பிருந்தே ரம்யா அககாவிடம் இருந்து அடிக்கடி போன். ஈரோட்டுப் பயணத்தின் போது கோவைக்கும் வருவதாகவும் தம்பியை( நாந்தேன் ) பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். மிக்க பாசமான அக்கா என்பதால் நானும் ஆவலாகக் காத்துக் கொண்டிருந்தேன். விதி விளையாடிவிட்டது. மேலே சொன்ன வேலைகளுக்காக கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுப் பயணத்திற்கு சென்றாக வேண்டியதாகிவிட்டது. இதை சொன்னதும் “ என்னடா தம்பி, புள்ள தனியா இருக்கேன்னு உனக்காக வத்தக் குழம்பு, பூண்டு ஊறுகாய் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டு இருக்கேன். பார்க்க முடியலையே”ன்னு ரொம்ப வருத்தப் பட்டாங்க. அதை எல்லாம் விஜியிடம் குடுத்துட்டுப் போய் இருக்காங்க. வந்து பார்த்தேன். அம்மாடீஈஈஈஈஈஈஈஈஈஈ. எவ்ளோ வாங்கி வந்திருக்காங்க. ஃப்ரிட்ஜ் நிரம்பிடிச்சி. அதை எல்லாம் எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கும்ப் போது, ஏனென்று சரியாகத் தெரியவில்லை , கண்ணீர் முட்டியது. நன்றி சொல்வது உங்களுக்கு பிடிக்காது என்பதால் மட்டுமில்லை , உங்கள் பாசத்தை அந்த வார்த்தையால் ஈடு செய்யவும் முடியாது என்பதால் நன்றி சொல்லவில்லை அக்கா. சொல்லிப் புரியவைக்க முடியாத சந்தோஷத்தில் இருக்கிறேன். உங்கள் பாசத்திற்கு என்னத் தவம் செய்தேனோ..
கோவைக்கு வந்து இரண்டு ஆண்டுகள் வரையிலும் இங்கு எனக்கு நண்பர்களே கிடையாது. வியாபாரத் தொடர்புகள் மட்டுமே. ஆனால் இப்போது ,
அண்ணாச்சி வடகரை வேலன் குடும்பத்தார்,
விஜி ராம்கோபால் குடும்பத்தார்,
மஞ்சூர் ராசா அண்ணா குடும்பத்தார்,
தாரணி அக்கா ஆகியோர் என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவனாகவே நடத்துகிறார்கள். நான் இங்கு தனியாக வாழும் உணர்வே இல்லை. இவர்களின் அன்புக்காக எல்லாம் நான் என்ன தவம் செய்தேனோ?
டிஸ்கி: மேலே குறிப்பிட்டிருப்பது அனைத்தும் பதிவுலகத்தால் மட்டுமே எனக்கு சாத்தியமானது. பதிவுலகத்திற்கு வராமல் இருந்திருந்தால் இந்த உறவுகளை எல்லாம் அடைந்திருக்க முடியாது. கோவையைத் தாண்டியும் இன்னும் ஏராளமான உறவினர்கள் இந்த பதிவுலகத்தால் எனக்குக் கிடைத்திருக்கிறார்கள்.
டிஸ்கி2 : பதிவுகள் எழுதுவதால் ஒரு பலனும் இல்லை என்று அவ்வப்போது சிலர் புலம்பி எழுதுவதைப் பார்த்தால் அவர்கள் மேல் அனுதாபம் தான் எற்படும். பாவம், அதிர்ஷ்டம் இல்லாதவர்கள். நான் பெரும் அதிர்ஷ்டசாலி.
டிஸ்கி3 : எழுதுங்கள் என் பின்னூட்டத்தில்.. இவன் பெரும் அதிர்ஷ்ட்டக்காரன் என்று. :)







