Mini Meals v 2.12.09

பொழுது போக்கிற்கு பதிவுகள் எழுதுபவர்கள் கூட , பதிவுக்காக குறைந்த பட்சம் கூட தகவலுக்காக உழைப்பதில்லை என சிலர் கடுமையாக விமர்சிக்கிறார்கள். விகடன் மாதிரி காசுக்கு விற்கும் பத்திரிக்கைகள் கூட அவ்வாறு தான் இருக்கின்றன. சில வாரங்கள் முன்பு ஜூனியர் விகடனில் “ 300 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஐநா சபை மாநாட்டில் திருமாவளவனும் பங்கேற்றதாக” எழுதி இருந்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட புதிய நாடுகளை கண்டுபிடித்து அதை விகடன் ரகசியமாக வைத்திருக்கிறது போல. சமீபத்தில் ஆனந்தவிகடனில் உளவாளி என்னும் இணைப்பு இதழ் வழங்கினார்கள். அதில் ரஷ்யாவின் உளவு நிறுவனம் 1953ல் தோற்றுவிக்கப் பட்டதாவும் இரண்டாம் உலகப் போரின் அதன் பங்கு முக்கியமானது எனவும் எழுதி இருந்தார்கள். விகடனுக்கு மட்டும் சிறப்புப் போராய், இரண்டாம் உலகப் போர் 1953க்கு பிறகு தான் நடைபெற்றதோ?. என்ன அக்கப்போரய்யா இது?

மீபத்தில் கோல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி விளக்குகள் எரியாததால் சிறிது நேரம் போட்டி பாதிக்கப் பட்டது. மொத்தமிருந்த 4 விளக்கு கோபுரங்களில் 3 கோபுரங்கள் எரியவில்லையாம். அதன் பிறகு டில்லி கோட்லா மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, மோசமான பிட்ச் தயாரிப்பால் ரத்து செய்யப் பட்டது. ஒரு சர்வதேசப் போட்டி மைதானத்தின் பிட்ச் கூட கவனிக்காமல் எப்படி விளையாட அனுமத்தித்தார்களோ? லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொழுத்துக் கிடக்கும் கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகளின் மெத்தனமே காரணம். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கு காமென்வெல்த் போட்டிகளில் இன்னும் எவ்வளவு சொதப்ப போகிறார்களோ? இந்த லட்சனத்தில் ஒலிம்பிக் போட்டி நடத்த முயற்சிக்கிறார்களாம். இந்திய விளையாட்டுத் துறைக்கு எப்போ விடிவுகாலம் வருமோ?

பாவம் பாரதிய ஜனதா கட்சி. எற்கனவே இந்திய மக்களால் புறக்கணிக்கப் பட்டுவிட்டது. அதோடு நில்லாமல் உள்கட்சி பிரச்சனைகளால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது. அந்த கட்சிக்கு யார் தலைவர் என்று அதன் நிறுவனர்களில் ஒருவரான அத்வானிக்கே தெரியவில்லை. அவரையும் கைபுள்ள ஆக்கிட்டாங்க. ஆர்எஸ்எஸ்-ன் மோகன் பகவத் தான் இப்போது பஜகவின் சுப்ரீம் லீடராக செயல்படுகிறார். இப்படி துக்கம் தொண்டையை அடைக்க அரசியல் செய்யும் அவர்கள் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு சிபுசோரனிடம் ஐக்கியமாகி இருக்கிறார்கள். சிபுசோரனைப் பற்றி தெரிந்தும் அவருடன் கூட்டு வைக்க அசாத்திய துணிச்சல் வேண்டும் தான் என்றாலும் இது சொந்த செலவில் சூனியமும் கூட. ஏந்தான் இப்படி ஆப்பைத் தேடிப் போய் அமர்கிறார்களோ?

காவல் துறை உயரதிகாரி ரத்தோர் என்பவரால் பாலியல் தொல்லைக்கு ஆளான ருச்சிகா என்னும் சிறுமி, அதன் பின் நடந்த சம்பவங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி 1993ல் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு காரணமான ரத்தோருக்கு 6 மாதம் சிறதண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ரத்தோரைவிட இந்தத் தீர்ப்பளித்த நீதிபதி தான் மிகப் பெரும் குற்றவாளி. இந்தக் கொடுமை இவர் மகளுக்கோ பேத்திக்கோ நடந்திருந்தால்( யாருக்கும் நடக்கக் கூடாத கொடுமை) இப்படித் தான் தீர்ப்பளித்திருப்பாரா?. நீதிபதிகளை விமர்சிக்கக் கூடாதாம். அதெல்லாம் அந்தக் காலம். நீதிபதிகள் நீதி அரசர்களாக மதிக்கப் பட்டார்கள். இப்போதைய நீதிபதிகள் செய்யும் முறைகேடுகள் பற்றி தொடர்ந்து செய்திகள் வருகின்றன. அப்படிப் பட்டவர்களை விமர்சிப்பதில் எந்தத் தவறும் இல்லை. இந்த வழக்கில் ரத்தோருக்கு ஆஜரானவர் ராம்ஜெத்மலானி. தன் வழக்காடும் அறிவை காசுக்காக எப்படி விற்கிறார் பாருங்க. ருச்சிகாவை பள்ளியில் இருந்து நீக்கியதற்காக அந்த பள்ளியின் மீது இப்போது வழக்குத் பதிவு செய்யப் பட்டுள்ளது. ரத்தோர் சொல்லி தான் நீக்கியதாக அந்த பள்ளி விளக்கம் சொல்கிறது. என்னக் கொடுமை.

ஒகேனக்கல்
மிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் குறிப்பிடத்தக்கது. தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் (விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது) அருகில் உள்ளது. தர்மபுரி மாவட்ட மக்கள் இதை காவேரி என்று தான் அழைக்கிறோம். இந்தியாவின் நயாகரா என்றும் அழைக்கப் படுகிறது. காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் இடம் தான் ஒகேனக்கல். பேரிரைச்சலுடன் ஐந்தருவிகளில் இருந்து விழும் நீரைப் பார்க்க அழகாய் இருக்கும். பரிசலில் பயணம் செல்லலாம். மீன் உணவுப் பிரியர்களுக்கு ஏற்ற இடம். பல வகையான மீன்களை மிகவும் சுவையாக சமைத்துக் கொடுக்கிறார்கள். ஆயில் மசாஜ் செய்வதற்கு புகழ்பெற்ற இடம். கொஞ்சம் நேரம் ஒதுக்கி தருமபுரியில் உள்ள அதியமான் கோட்டத்தையும் பார்வை இடலாம்.

தருமபுரியிலிருந்து 45கிமீ , சேலத்திலிருந்து 113கிமீ மற்றும் பெங்களூரில் இருந்து 133கிமீ தொலைவில் உள்ளது.

ஒகேனக்கல்லில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் தங்கலாம். 6 படுக்கைகள் கொண்ட ஃபேமிலி ரூம் 1000 ரூபாய் கட்டணத்தில் கிடைக்கிறது . இருவர் தங்கும் அறைகளும் உள்ளன. தனியார் ஹோட்டல்களும் உள்ளன. ஒருநாள் பயணமாக செல்பவர்கள் தருமபுரியில் தங்கலாம். ஏராளமான ஹோட்டல்கள் இருக்கின்றன.

தொடர்புக்கு :
Hotel TamilNadu : 04342 - 2564447

பயணப் பதிவுகளுக்கான என் குருவின் ஒகேனக்கல் சுற்றுலா அனுபவம் படிக்க..

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

Read more...

எனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு!

தலைப்பு உபயம் : வால்பையன்

Read more...

20 தமிழக சுற்றுலா தலங்கள்- பகுதி 2

பகுதி ஒன்றில் இருக்கும் 10 சுற்றுலாத் தலங்கள் பற்றி அறிய இங்கே

11.முண்டந்துறை
பாபநாசம் மலையின் அழகிய அருவிகளைத் தாண்டினால் புலிகள் சரணாலயம். ட்ரெக்கிங்கிற்கு ஏற்ற இடம்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ளது. மதுரை விமான நிலையத்திலிருந்து 200 கிமீ.

அம்பாசமுத்திரத்தில் பொதுப்பணித் துறை, களக்காட்டில் மின்வாரியம், முண்டந்துறையில் வன இலாகா கெஸ்ட் ஹவுஸ்களில் தங்கலாம்.




12. வால்பாறை


மலை முழுதும் பச்சைப் பசேல் தோற்றம். தேயிலை, காபி எஸ்டேட்டுகள்.

பொள்ளாச்சியிலிருந்து 64 கிமீ. கோவை வரை ரயில் பயணம்.

தங்கும் வசதிகள் உண்டு. ஹோம் ஸ்டே வசதியும் உள்ளது.




13.கங்கை கொண்ட சோழபுரம்


ராஜேந்திர சோழனின் தலைநகர். யுனெஸ்கோ உலக மரபுச் சின்னம் கவுரவம் பெற்றது.

ஜெயங்கொண்டத்துக்கு அருகில் உள்ளது. திருச்சியில் இருந்து பஸ் வசதி உண்டு.

ஜெயங்கொண்டத்தில் தங்குமிட வசதிகள் உண்டு. ஒரு நாள் பயணமென்பதால் வேறு இடங்களிலும் தங்கலாம்.( எனக்கு 2 நெருங்கிய நண்பர்கள் இருக்காங்க. அவங்க வீட்டுக்கும் போகலாம்:) )

14. தரங்கம்பாடி

200 ஆண்டுகளுக்கு மேல் டச்சுக்காரர்கள் கட்டுபாட்டிலிருந்த வரலாற்று சிறப்பு மிக்க நகரம்.

நாகப்பட்டினத்திலிருந்து 35 கிமீ. கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லலாம்.

நாகப்பட்டினம் மற்றும் திருக்கடையூரில் தங்கலாம்.






15. கோடியக்கரை


250 வகைகளைச் சேர்ந்த 1 லட்சம் பறவைகள். வெளிமான், டால்பின்களைக் கண்டு ரசிக்கலாம்.

நாகப்பட்டினத்திலிருந்து 55 கிமீ. திருத்துறைப் பூண்டி வரை ரயில், பஸ் வசதிகள் உண்டு.

கோடிக்கரை வனத்துறை கெஸ்ட் ஹவுஸ். நாகப்பட்டினத்தில் ஹோட்டல்கள்.

16.கூந்தங்குளம்

நவம்பர் முதல் ஜூலை வரை 140 வகையான பறவைகளைக் காணலாம்.

திருநெல்வேலியில் மூலக்கரைப்பட்டி வழியாக பஸ்ஸில் செல்லலாம்.

திருநெல்வேலியில் தங்கலாம்.






17. ஜவ்வாதுமலை


அதிசயங்களை உள்ளடக்கிய மலை. மலைவாழ் மக்களின் வாழ்க்கையை நேரடியாக உணரலாம்.

திருவண்ணாமலையில் இருந்து 75 கிமீ தூரத்தில் வானியம்பாடி அருகில் உள்ளது.

மலையில் ஃபாரஸ்ட் கெஸ்ட் ஹவுஸ் மட்டும் உண்டு. அடிவாரத்தில் உள்ள ஊர்களில் தங்கலாம்.



18.கல்வராயன் மலை


1976 வரை ஜாகிர்தார்களின் கட்டுபாட்டில் கட்டுப்பாட்டில் இருந்ததால் பழமை மாறாமல் இருக்கும் ஊர்.

கள்ளக்குறிச்சி & உளுந்தூர்ப் பேட்டை சென்று அங்கிருந்து கல்வராயன் மலைத்தொடர் ஏறலாம்.

தங்குவதற்கு சாதாரன ஹோட்டல்களே உள்ளன. அடிவார ஊர்களில் தங்கலாம்.

19.ஏற்காடு

ஏழைகளின் ஊட்டி என்ற பெருமை. ஊட்டியைப் போன்ற க்ளைமேட். சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள்.

சேலத்திற்கு அருகில். பல பகுதிகளில் இருந்தும் சேலத்திற்கு ஏராளமான ரயில்கள் உண்டு.

ஏற்காட்டில் சிறிய பெரிய ஹோட்டல்கள் ஏராளமாக உள்ளன.





20. வேடந்தாங்கல்


115 வகை வெளிநாட்டு, உள்நாட்டுப் பறவைகள் நவம்பர் முதல் இங்கு ஆயிரக்கணக்கில் வருகின்றன.

சென்னையில் இருந்து 86கிமீ. தாம்பரத்தில் பஸ் வசதி உண்டு.

வனத்துறை ரெஸ்ட் ஹவுஸ் இருக்கிறது. பறவைகள் பார்க்க காலை நேரம் உகந்தது.

தகவல்கள் : இந்தியா டுடே.
படங்கள் : பல்வேறு இணையதளங்களில் இருந்து எடுத்தது.

Read more...

20 தமிழக சுற்றுலா தலங்கள்- பகுதி 1

1. பிச்சாவரம்
தனிச்சிறப்பு:
மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகளுக்கு நிகரான கடல் முகத்துவாரம். மாங்குரோவ் வகைக் காடுகள்.

அருகாமை:
சிதம்பரத்திலிருந்து 16கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

தங்குமிடம்:
தமிழ்நாடு வனத்துறையின் கெஸ்ட் ஹவுஸ், ஹோட்டல் அக்‌ஷயா போன்ற இடங்கள்.



2. மன்னார் வளைகுடா


தனிச்சிறப்பு:
டால்பின், ட்யூகாங், பவளத்திட்டுகள் என கடல் உயிரின வளம் செழித்த , யுனெஸ்கோ கவுரவம் பெற்றப் பகுதி.

அருகாமை:
மண்டபத்துக்கு அருகே உள்ளது. ராமநாதபுரம் வழியாக செல்லலாம்.

தங்குமிடம்:
ராமேஸ்வரத்தில் தேவையான தங்குமிட வசதிகள் உண்டு.

3.ஏலகிரி

தனிச்சிறப்பு:
சாகச சுற்றுலாப் பயணிகளுக்கான பாரா க்ளைடிங், ட்ரெக்கிங் செல்லலாம்.

அருகாமை:
ரயில்மார்க்கமாக ஜோலார்பேட்டையில் இறங்கி பேருந்து கார் மூலமாக செல்லலாம்.( கிருஷ்ணகிரி அருகில் - எங்க ஏரியாவாச்சே. :) )

தங்குமிடம்:
மிகக்குறைவான விலையில் தொடங்கி சிறந்த அனுபவம் தரும் ஹோட்டல் வரை.

4.முதலியார் குப்பம்:
தனிச்சிறப்பு:
நீர்ப்படுமை நடுவே 20 நிமிடங்கள் படகில் பயணித்து கடற்கரையை அடைய வேண்டும்.

அருகாமை:
சென்னை - புதுச்சேரி நெடுஞ்சாலையில் சுமார் 50கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

தங்குமிடம்:
கிழக்குக் கடற்கரை சாலை முழுதும் ஹோட்டல்கள்.

5.முட்டம் கடற்கரை

தனிச்சிறப்பு:
சூரியனின் உதயம், அஸ்தமனத்தை அழகாக பார்க்க முடியும்.

அருகாமை:
நாகர்கோவிம் மற்றும் கன்யாகுமரிக்கும் அருகில்.

தங்குமிடம் :
முட்டத்திலேயே தங்குவதற்கு நல்ல ஹோட்டல்கள் உண்டு.



6. வட்டக் கோட்டை


டச்சுக் கடற்படையை மார்த்தாண்ட வர்மா வீழ்த்திய இடம். க்ரேன் அளவு உயரத்தில் நீலக் கடலை ரசிக்கலாம்.

நாஞ்சில் நாட்டில் குமரி முனையின் வடகிழக்கில் 6 கிமீ தொலைவில் உள்ளது.

கன்னியாகுமரியில் தங்குமிடம்.



7.கொல்லிமலை
அழகான கொண்டை ஊசி வளைவுகள். அறப்பளீசுவரர் கோயில், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி. சித்தர்கள் உலவுகிறார்களாம்.

சேலம் ரயில் நிலையத்திலிருந்து 100 கிமீ. திருச்சி விமான நிலையத்திலிருந்து 90கிமீ.

கொல்லிமலை ஹில்ஸ், நல்லதம்பி ரிசார்ட் போன்ற தங்குமிடங்கள்.



8.மேகமலை


வர்த்தகமயமாகாதலால் சீர்கெடாத மலைப் பகுதி. காஃபி தோட்டங்களும் நடுவில் ஓடும் அழகிய நதியும்.

மதுரையிலிருந்தும் தேனியிலிருந்தும் செல்லலாம். சின்னமனூரிலிருந்து 2 மணி நேரம் மலைப் பயனம்.

பஞ்சாயத்து போர்ட் விடுதியில் ஆறு அறைகள். தேனியில் தங்கலாம்.( ஃபாரஸ்ட் ரிசார்ட் இருப்பதாக எங்க டீலர் ஒருத்தர் சொன்னார் )

9.பைக்காரா
வெள்ளி அருவியாக பைக்காரா நதி பள்ளத்தில் வீழ்வதும் அணைப் பகுதியில் படகு சவாரியும்.

கோவையிலிருது சாலை மார்க்கமாக செல்லலாம். மேட்டுபாளையத்திலிருந்து ரயில் பயணம் மூலமும் வரலாம்.

தங்குமிடங்கள் ஏராளம். ரூ.200 முதல் ரூ.20,000 வரை.




10.திற்பரப்பு அருவி


தென் தமிழகத்தில் அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத கூட்டம் இல்லாத அருவி.

குழித்துறை வரை ரயிலிலும் நாகர்கோவிலிலிருந்து ரயில் மற்றும் சாலை வழியாகவும் செல்லலாம்.

திற்பரப்பில் தங்கும் வசதி அதிகமில்லை. நாகர்கோவில், கன்னியாகுமரியில் தங்கலாம்.


தகவல்கள் : இந்தியா டுடே.
படங்கள் : பல்வேறு இணையதளங்களில் இருந்து எடுத்தது.
அடுத்த பதிவில் மீதி 10 தலங்கள் பற்றிய தகவல்கள் வரும்..

முதலியார் குப்பம் படம் கிடைக்கவில்லை. யாராவது உதவவும்.

Read more...

பயிலரங்கு பதிவர் சந்திப்பு இட்லிவடை போட்டோ

நாமக்கல் மாவட்ட மக்கள் அதிர்ஷ்டசாலிகள். அவர்களுக்கு மிகச் சிறந்த ஆட்சியர் கிடைத்திருக்கிறார். உதாரணம் காட்டக் கூடிய அரசு அதிகாரி. மக்களின் பொதுப் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக அவர்கள் படும் சிரமங்களை கவனத்தில் கொண்டு, தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களின் குறைகளை அரசு அதிகாரிகளுக்கு தெரியபடுத்தவும் அதை விரைவாக நிவர்த்தி செய்யவுமான ஒரு பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தார். மாவட்டத்தில் பல கிராமங்களில் இருந்து தலா 5 தன்னார்வலர்களை வரவழைத்திருந்தார். 200 பேருக்கும் மேல் தன்னார்வலர்களும் அரசு அதிகாரிகளும் ஆர்வமுடன் கலந்துக் கொண்டார்கள்.

அவர்களுக்குப் பயிற்சியும் விழுப்புணர்வும் அளிப்பதற்காக தமிழ்மணம் திரு. காசி , நான்(சஞ்சய்) , திரு.லதானந்த், திரு. தகடூர் கோபி, திரு.விஜயகுமார், திரு. செல்வமுரளி ஆகியோர் அழைக்கப் பட்டிருந்தோம். வலைப்பூக்களின் தொழில்நுட்பம் மற்றும் பயன்கள் பற்றி காசி அண்ணாவும், தமிழில் தட்டச்சு செய்யும் முறை மற்றும் தொழில்நுட்பம் பற்றி தகடூர் கோபியும், கணினி மற்றும் இணையத்தில் தமிழ் என்பது பற்றி நானும், அதிகாரியில் பார்வையில் வலைப்பூக்கள் மற்றும் அதன் பயன்கள் என்பது பற்றி லதானந்தும் விளக்கமளித்தோம்.

பயிலரங்கத்தின் ஆரம்பத்தில் அமெரிக்காவிலிருந்து திரு. ஆல்பர்ட் , ஆஸ்திரேலியாவிலிருந்து திரு.முகுந்த்( இ கலப்பை உருவாக்கியவர், நாமக்கலை சேர்ந்தவர்), மலேசியாவிலிருந்து திரு. இளந்தமிழ் , பிரான்சிலிருந்து திரு. பெஞ்சமின் லெபோ, சிங்கப்பூரிலிருந்து திரு. மணியம், லண்டனிலிருந்து திரு.சிவாபிள்ளை ஆகியோர் விடியோ கான்ஃபரன்சிங் மூலமாக வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக வழக்கறிஞர் திரு. மார்ட்டின் அவர்கள் தகவல் உரிமை சட்டம் மற்றும் பயன்கள் பற்றி விளக்கமளித்தார்.

பிறகு அனைவரும் குழுவாக பிரிந்து தமிழ்பயன்பாடு பற்றிய நேரடிப் பயிற்சியை அளித்தோம். மிக திருப்தியான உபயோகமான பயிலரங்காக அமைந்தது. மாவட்ட ஆட்சியரின் ஆர்வத்தை அறிந்து அதற்கான முயற்சியை எடுத்து எங்களை எல்லாம் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட காரணமாக இருந்தவர் திரு. ஆல்பர்ட் அவர்கள். அமெரிக்காவில் வசிக்கிறார். விளக்கமளிக்க ஏதுவாக பவர்பாய்ண்ட் ப்ரசண்டேஷனை உருவாக்கி அனுப்பி இருந்தார். அதற்குத் தான் நான் விளக்கமளித்தேன். நல்ல வேளை எனக்குத் தெரியாத எதுவும் அனுப்பவில்லை. தப்பித்தேன். நன்றி ஆல்பர்ட் சார். :)

குறிப்பு: இந்தப் பயிலரங்கிற்கு, பதிவர்கள் என்ற முறையில் மட்டுமே நாங்கள் அழைக்கப் பட்டிருந்தோம். மொக்கைப் போடுகிறோம், கதை, கவிதை எழுதுகிறோம், நமக்குள் உதவிக் கொள்கிறோம் என்பதைத் தாண்டி நமக்குத் தெரிந்த தொழில்நுட்பத்தையும் ஒன்றுகூடும் மனோபாவத்தையும் கொண்டு சமுதாயத்திலும் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதற்கு இந்த பயிலரங்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் மற்றும் நல்ல ஆரம்பம். பதிவர்களாய் இருக்க பெருமை கொள்வோம்.

---------------------------------------
மாலையில் ஈரோட்டில் நடைபெற்ற சங்கமம் பதிவர் சந்திப்பில் கலந்துக் கொண்டேன். இவ்வளவு பதிவர்கள் வருவார்கள் என நினைக்கவில்லை. ஏராளமான பதிவர்களை/புதியவர்களை சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. யாரும் முதல் முறை சந்திப்பவர்கள் போல நடந்துக் கொள்ளவில்லை. மிகுந்த பாசமுடன் நீண்ட கால நண்பர்கள் போலவே நடந்துக் கொண்டார்கள். இது தான் பதிவுலகத்தின் நம்பகத் தன்மைக்கு உதாரணம். தனிப்பட்ட விரோதம் , சுயக் கட்டுபாடின்மை போன்றவற்றால் இந்த ஆரோக்கியமான சூழலைக் கெடுத்துவிடக் கூடாது.

முதல் முறை ஏற்பாடு செய்த பதிவர் சந்திப்பு போலவே இல்லை. மிகச் சிறப்பாக திட்டமிட்டு மிகக் கடுமையாக உழைந்திருக்கிறார்கள். வால்பையன் தவிர்த்த ஈரோடு பதிவர்கள் அனைவருக்கும் சல்யூட். சாதிச்சிட்டிங்க. மேடை அமைத்து நாற்காலிகள் எல்லாம் போட்டிருந்ததை பார்த்ததும் வயிற்றில் சல்ப்யூரிக் ஆசிட் கரைத்தாலும் யாரும் கொடுமை படுத்தும் அளவு சொற்பொழிவு ஆத்தவில்லை. :). காசி அண்ணா மற்றும் பழமைப் பேசியின் உரைகள் வெகு சிறப்பு. பழமைப் பேசி அரசியலுக்கு வந்தால் விரைவில் கோட்டையைப் பிடித்து விடுவார். பேச்சால் நம்மைக் கட்டிப் போடுகிறார். ஆரூரான் அவர்கள், கலிங்கராயன் காளிங்கராயனாகி பின்னர் காளிங்க கரையான் ஆனதை சுவாரஸ்யமாக சொன்னார். மிக சுவையான இரவு உணவிற்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இந்த விழா இவ்வளவு சிறப்பாக நடபெற அதிகம் உழைத்தவர் ஈரோடு கதிர். சந்திப்புகளுக்கு இவரை ஆலோசகராக நியமிக்கலாம். மனிதர் பிரமாதமாய் வழிநடத்துவதோடு மிகப் பிரமாதமாய் விருந்தினர்களை உபசரிக்கிறார். நந்தண்ணா( f/o நிலா) , கார்த்திக்( தல அடிக்கடி பதிவு எழுதுங்க) , கோடிஸ்வரன் , ஜாபர்( பதிவர் இல்லை) , நாகா மற்றும் பல ஈரோட்டுப் பதிவர்களின் முயற்சியும் மிக அன்பான உபசரிப்பும் குறிப்பிடத்தக்கது.

--------------------------------


என்ன சாப்பாடு போடறாங்களோ போங்க.. ஈரோட்டுப் பதிவர் சந்திப்பின் முடிவில் சாப்பிட இட்லி குடுத்தாங்க இன்னும் என்னென்னவோ குடுத்தாங்க. ஒரு வடைக் குடுக்கனும்னு தோனவே இல்லை. அதையும் குடுத்திருந்தால் ஈரோட்டில் இட்லிவடை என்றே தலைப்பு வைத்திருக்கலாம். இப்போ பாருங்க , நெட்ல இருந்து எடுக்க வேண்டியதா போச்சி. என்னவோ போங்க பாஸ்...

பயிலரங்கு மற்றும் பதிவர் சந்திப்பு படங்கள் உதவி : kasilingam.blogspot.com

Read more...

தமிழ்மணம் விருதுகள் - அதிக ஓட்டு வாங்குவது எப்படி?

தமிழ்மணம் விருதுகள்2009 அறிவிச்சி பல பதிவர்களும் அதில் தங்கள் பதிவுகளை இணைச்சிருக்காங்க. எல்லாப் பதிவுகளையும் படிச்சி நேர்மையா ஓட்டுப் போடறதுக்கெல்லாம் யாருக்கும் நேரம் இருக்காது. உலக வலைப்பதிவுகளிலேயே தமிழ் பதிவுகளுக்கென்று ஒரு தனி சிறப்பு இருக்கு. சக்தி வாய்ந்த குழுக்கள் சில பல உண்டு . இப்போவே பல குழுக்களும் களத்துல குதிச்சிட்டாங்க. வேற ஒன்னுமில்லீங்க .. எல்லாம் கிவ்வண்ட்டேட் தானுங்க. அந்த குழுக்களுக்குள்ளயே மாத்தி மாத்தி ஓட்டுப் போட்டுப்பாங்க. போட்டுக்கிட்டும் இருக்காங்க.

ஆனால் என்னை மாதிரி எந்த கோஷ்டியிலும் சேராத( சேர்த்துக் கொள்ளப்படாத) ஆளுங்களும் இருக்கோமில்லையா?. நம்மளுக்கெல்லாம் எப்படி ஓட்டு வாங்கறதுன்னு ஒக்காந்து யோசிச்சதுல ஒரு ஐடியா கெடைச்சது.

தமிழ்மணம் விருதுகள் பதிவுகளுக்கு ஓட்டுப் போட கால அவகாசம் குடுத்திருக்காங்க. அந்த அவகாசத்துல நாம எத்தனை முறை வேண்டுமானாலும் ஓட்டுகளை மாற்றிப் போடலாம். இதைப் பயன்படுத்தி எப்டி ஓட்டு வாங்கறதுன்னு சொல்லிடறேன்.

நீங்க போட்டியிடற பிரிவு தவிர மற்ற பிரிவுகளில் இருக்கும் பதிவர்கள் பட்டியல் பாருங்க. ( நம்ம பதிவு விட்டு போட்டியாளருக்கு ஓட்டுப் போடற அளவுக்கா நாம நல்லவங்க? ) பெரும்பாலானவங்க மெயில் ஐடி நம்ம கிட்ட இருக்கும். இல்லைனாலும் அவங்க ப்ரொஃபைல் பக்கம் பார்த்து எடுத்துக்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம். முதலில் இருக்கும் பதிவரின் பதிவுக்கு ஓட்டுப் போடுவோம். அது முகப்புல வந்து நிக்கும். அதை அப்டியே ஒரு ஸ்க்ரீன் ஷாட் எடுங்க. அதை அந்த பதிவருக்கு அனுப்புங்க. ”உனக்கு நான் ஓட்டுப் போட்டிருக்கேன். இதோ ஆதாரம். எனக்கும் ஓட்டுப் போடு” - இதான் செய்தி. இப்போ திரும்ப உள்ள போய் இரண்டாவது பதிவுக்கு ஓட்டுப் போடுவோம். அதையும் ஸ்க்ரீன் ஷாட் எடுப்போம். அதை அந்தப் பதிவருக்கு அனுப்பி ஓட்டுக் கேட்போம்.

இப்டியே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து எடுத்து மெயில் அனுப்பி விளையாடலாம். ஏமாந்தவங்க யாருமேவா இருக்க மாட்டாங்க. 100 பேர்ல 10 பேர் ஓட்டுப் போட்டாலும் லாபம் தானே. ஐடியா ஓக்கேவா?.. வாங்க விளையாடலாம்.

டி(வி)ஸ்கி: இனி யார்னா ஸ்க்ரீன்ஷாட் அனுப்பி ஓட்டுக் கேட்டா நம்புவீங்க? :))

Read more...

ஆப்பி பர்த்து டேய் குசும்பா

என் பாசமிகு மாமன் குசும்பனாருக்கு இன்று ஆப்பி பர்த்துடே. அவருக்கு இது பல வகையில் மிகச் சிறப்பான பிறந்த தினம். அப்பா பதவியுடன் கொண்டாடும் முதல் பிறந்தநாள். ஜூனியர் குசும்பன் இனியனின் வாழ்த்துடன் கொண்டாடும் இனிய பிறந்தநாள். 8 முறை முயற்சித்து 1.5 லட்சம் செலவழித்து கார் ஓட்ட லைசென்ஸ் எடுக்கும் வைபவத்தில் தேறி இருக்கிறார். எல்லாப் புகழும் மருமகன் இனியனுக்கே. என் மாமன் குசும்பன் எல்லா செல்வங்களும் பெற்று பல ஆயிரம் ஆண்டுகள் நல்ல புகழோடும் ஆரோக்கியத்தோடும் வாழோனும்னு வாழ்த்த வயதில்லை என்றாலும் வணங்கிக் கொள்கிறேன். வாழ்க வளமுடன் குசும்பன் @ சரவணவேல்.

Read more...

Mini Meals v 1.12.09

கோவையில் உறங்குவது போல் 7 மணிக்கு அடிக்கும் அலாரத்தை அணைத்துவிட்டு 8 மணிவரை தூங்கும் வேலை எல்லாம் ஊரில் வேலைக்கு ஆகறதில்லை. மிகச் சரியாக 7 மணிக்கு 2 பேர் வராங்க. காதுகிட்ட வந்து கன்னாபின்னான்னு திட்றாங்க. விரட்டிவிட்டு மறுபடி தூங்க முயற்சிப்பேன். ம்ஹூம்.. நம்ம பருப்பெல்லாம் இவங்க கிட்ட வேகறதில்லை. மறுபடி வந்து கெட்ட வார்த்தைல திட்ட ஆரம்பிச்சிடுவாங்க. ஆனாலும் அவர்கள் திட்டுவது எனக்கு ரொம்ப இனிமையா இருக்கும். எங்கே கூடு கட்டி குடி இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் தினமும் காலையில் 7 மணிக்கு என் படுக்கை அறை ஜன்னலில் அமர்ந்து ட்விட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். எலேய் நானும் ட்விட்டர்தாம்லே என்று நான் சொன்னது அவர்களுக்கு கேட்டதா தெரியவில்லை. இவர்கள் பண்ணும் சில பல அழிச்சாட்டியங்களை எழுதினாலே ஒரு பதிவு தேறும். எப்டி எல்லாம் வெறுப்பேத்தறாங்கய்யா.. மைனா மைனாக் குருவி...

ஊருக்குப் போகும் போது கோவை ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கும் கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க முன் பதிவு செய்துவிடுவதுண்டு. ஊரிலிருந்து வரும் போது முன் பதிவு செய்வதில்லை. சூழ்நிலை பொறுத்து வெஸ்ட் கோஸ்ட் அல்லது இண்டர்சிட்டியில் வருவேன் என்பதால் சரியாக திட்டமிட முடிவதில்லை. மேலும் என்னையும் சேர்த்து 5 பேருக்கு மேல் வரிசையில் இருந்து நான் பார்த்ததே இல்லை. அங்கே பயணச் சீட்டுப் பெறுவதும் சுலபம் தான். ஓபன் டிக்கெட் வாங்கிவிட்டு ரிசர்வேஷன் கோச்சில் வருதுவதும் சுகம் தான். சமயத்தில் 15 ரூபாய்க்கு ரசீது வாங்க வேண்டிய நிலையும் வரும். ஹ்ம்ம்..ஆல் இன் தி கேம். இந்த வாட்டி இண்டர்சிட்டியின் நேரத்திற்கு நான் ரயில் நிலையம் வந்தாலும் பல மணி நேரம் தாமதமாக வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்ப்ரஸ், இண்டர்சிட்டி நேரத்திற்கு வந்தது. அதிலேயே ஏறிக் கொண்டேன். சிறிது தூரம் சென்றதும் ரயிலில் ஒரு பையன் சமோசா விற்றுக் கொண்டிருந்தான். எனக்கு வெங்காய சமோசா என்றால் ரொம்ப பிடிக்கும். விசாரித்த்தில் அதுவும் வெங்காய சமோசா தான். 10 ரூபாய்க்கு 3 என்றான். ஹிஹி.. யூ ஆர் ரைட். 6 வாங்கிக் கொண்டேன். உணவகங்களில் விற்பது போன்ற வெஜ் சமோசா எனக்குப் பிடிக்காது. பெரும்பாலான ரயில்களிலும் வெஜ் சமோசா தான் விற்பார்கள். அதனால் எப்போது ஈரோடு சென்றைடைவோம் எனக் காத்துக் கொண்டிருப்பேன். ஈரோடு ரயில் நிலையத்தில் சிறிய அளவு வெங்காய சமோசாக்கள் விற்பார்கள். அமிர்தமாய் இருக்கும். இப்போது ரயிலிலேயே கிடைத்ததில் சந்தோஷம். கோவை/இண்டர்சிட்டி எக்ஸ்ப்ரஸில் உணவகம் அழகாய் இருக்கும். பாதி கோச் சமையல் பகுதியாகவும் மிச்சம் பாதி ரெஸ்டாரண்ட் போன்ற தோற்றத்துடனும் இருக்கும். சமோசா சாப்பிட வரும் சேட்டுப் பெண்களை ரசித்துக் கொண்டே மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுப் பாருங்கள். சும்மாவாச்சும் பயணம் செய்யத் தோன்றும். மற்ற ரயில்களில் அப்படி இருப்பதில்லை.

விரைவில் வெளிநாடு செல்லவிருக்கும் ஒரு அண்ணா புதிய டெல் ஸ்டுடியோ 15 லேப்டாப் வாங்கி இருக்கிறார். ரயிலில் அதை இயக்கிப் பார்த்துக் கொண்டிருந்த போது அதிலிருந்த ஜானகி அம்மாவின் ஒரு பாடல் எனக்குத் தேவைப்பட்டது. அந்த லேப்டாப்பில் ப்ளூடூத் வசதி இருந்ததால் என் மொபைலுக்கு பாடலை மாற்றும் முயற்சியில் இருந்தேன். அப்போது என் மொபைலை அந்த லேப்டாப்புடன் இணைக்கும் செட்டிங்ஸ் முடிவுற்றதும் ஒரு பக்கம் தோன்றியது. அதில் மொபைல் ப்ளூடூத் பயன்படுத்தி இணைய இணைப்பு பெறவும் என்று ஒரு செய்தியும் அதன் முடிவில் Connect என்ற பட்டனும் இருந்தது. இதென்னாடா புதுசா இருக்கே என்று Connect பட்டனை அமுக்கியதும் டயலப் விண்டோ வந்தது. அதில் யூசர் நேம் , பாஸ்வேர்ட் எல்லாம் கேட்டதால் பொக்குன்னு போனாலும் எதுவும் உள்ளிடாமலே கனெக்ட் என்றேன். என்னக் கொடுமை ஆபிசர்ஸ்? இணைய இணைப்புக் கிடைத்துவிட்ட்டது. ஆனாலும் எதுவும் ப்ரவுஸ் பண்ண முடியலை. தானாகவே ஐபி முகவரியை எடுத்துக் கொள்ளும் வசதியை தேர்ந்தெடுத்து மீண்டும் முயற்சித்ததில், அடடே... டயலப் இணைப்பைவிட வேகமாக இணையத்தை பயன்படுத்த முடிந்தது. என் மொபைலில் இணைய வசதி இருந்த்தால் லேப்டாப்பிலும் இந்த வசதியை பெற முடிந்தது போலும். ஆனால் அது மொபைலுக்கான பாக்கெட் டேட்டா என்று தான் இவ்வளவு நாள் நினைத்திருந்தேன். டெஸ்க் டாப்பில் டேட்டா கார்ட் மூலம் முயற்சித்திருக்கிறேன். தோல்வி தான். ப்ளூ டூத் வழியாக மட்டும் சாத்தியமோ என்னவோ?.. கம்ப்யூட்டர் புலிகளுக்கு இது பழைய தகவலாக இருக்கலாம். என்னைப் போன்ற பாமரனுக்கு புதியதாய் இருந்தது. ப்ளூடூத் வசதியின் மூலம் என் மொபைலில் இருந்த படங்கள், விடியோக்கள் உள்ளிட்ட கோப்புகளையும் லேப்டாப்பிலேயே இயக்க முடிந்தது. எதையோ செய்யப் போய் எதையோ தெரிந்து கொண்டேன். ப்ளூ டூத் மூலம் என் மொபைலையும் அவர் லேப்டாப்பையும் இணைக்கும் போது திரையில் தெரிந்த Virus Found என்ற என் மொபைல் பெயரைப் பார்த்து அண்ணாத்த ரொம்பவே டரியல் ஆய்ட்டார். பின்ன புது லேப்டாப் ஆச்சே. :) சமீபத்தில் ஒரு கல்லூரியின் கருத்தரங்கில் , என் மொபைலிலிருந்து புகைப் படத்தை மாற்ற முயற்சிக்கும் போது Virus Found என்ற வார்த்தையைப் பார்த்து பிரபல காட்டிலாக்கா பதிவர் தன் மொபைலை ஆஃப் பண்ணிட்டார். :) டரியல் தொடர்கிறது...

சென்ற முறை ஊருக்கு சென்றிருந்த போது ஊர் சுற்றல் அதிகமாக இருந்ததால் வயல்வெளி விசிட் போகவில்லை, இந்த வாட்டியும் அதிக வேலைகள் இருந்தாலும் எப்படியும் வயலுக்கு செல்ல வேண்டும் என்று நேரம் ஒதுக்கி சென்றேன். பருத்தி , வழக்கத்தை விட நன்றாக இருந்தது. விளைச்சல் நன்றாக இருக்கும் என்பது பார்த்தாலே தெரிந்தது. வீட்டிற்கு வந்ததும் எங்கம்மா ஒரே பருத்தி புராணம் தான். வழக்கமாக பயிரிடும் மரபுவழி விதை இல்லாமல் மரபணு மாற்றப் பட்ட விதைகளை பயன்படுத்த தொடங்கிவிட்டதால் தெரியும் மாற்றம் இது. வழக்கம் போல் பூச்சிக் கொள்ளி மருந்தின் தேவையும் பெரிதாக இல்லையாம். மரபணு மாற்றப் பட்ட விதைகளை உபயோகிப்பதை நான் ஆதரிக்க இதுவும் ஒரு காரணம். மற்ற காரணங்களைத் தனியாக எழுதுவோம்.

சன் டிவி குழுமம் ஏராளமான திரைப் படங்களை ரிலிஸ் செய்வதால் தினம் தினம் அதன் காட்சிகளைப் போட்டு விளம்பரம் செய்கிறார்கள். கலைஞர் டிவியும் அவர்களுக்குப் போட்டியாக எதாவது செய்தாகணுமே. அதனால் தினம் தினம் கலைஞருக்கு நடக்கும் பாராட்டு விழாவிற்கான அழைப்புக் காட்சிகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சன் டிவி வெளியிடும் திரைப் படஙளைவிட கலைஞரின் பாராட்டு விழாக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. முதலமைச்சராக தான் செய்யும் கடமைகளுக்கெல்லாம் பாராட்டு விழா நடத்தும் ஒரே முதல்வர் நம்ம கலைஞர் ஐயா தான். நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற.. நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற.. பின்ன யாரு இவ்ளோ இலவசங்களைத் தருவாங்க.

என்னடா இது கூகுள் வேவிற்கு வந்த சோதனை. பதிவு போட்டு சொல்லியும் பெரிதாக வரவேற்பில்லை. பலருக்குக் கொடுத்தும் இன்னும் ஏராளமான அழைப்புகள் இருக்கு. வேண்டுவோர் பின்னூட்டம் அல்லது மெயிலில் தெரியப் படுத்துங்கள்.

மினி டிப்ஸ்

  • சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு க்ளாஸ் தண்ணீர்க் குடிப்பது ஜீரணத்திற்கு உதவுமாம்.
  • காலையில் தூங்கி எழுந்த உடன் 2 க்ளாஸ் தண்ணீர்க் குடித்தால் உடளுக்குள் இருக்கும் உறுப்புகள் சரியாக இயங்க உதவுமாம்.
  • இரவில் தூங்குவதற்கு முன் 1 க்ளாஸ் தண்ணீர்க் குடித்தால் நடு இரவில் இதயக் கோளாறு மற்றும் பக்கவாதம் வராமல் காக்குமாம்.
  • குளித்த உடன் 1 க்ளாஸ் தண்ணீர்க் குடித்தால் உயர் ரத்த அழுத்தம் குறையுமாம்.

Read more...

Google Wave Invitation

முஸ்கி: இதால இப்போதைக்கு ஒரு பயனும் இருக்கிற மாதிரி தெரியலை.

நானும் வாரி வாரி வழங்கிட்டு இருக்கேன். அட்ஷய பாத்திரம் மாதிரி அழைப்புகள் பெருகிட்டே இருக்கு. இப்போதும் என்னால் 35 பேருக்கு அழைப்பு அனுப்ப முடியும். யாருக்காவது வேணும்னா மெயில் அனுப்புங்கோ. முதலில் வருவோருக்கே முன்னுரிமை. :)

கூகுள் வேவ் பற்றி அறிய இங்கே..

டிஸ்கி: இதற்காக என் வலைப்பூவுக்கு ஃபாலோயரா ஆகனும்னெல்லாம் சொல்ல மாட்டேன். நீங்களா விருப்பப் பட்டு( சரி சரி.. கூல் டவுன்) ஃபாலோயர் ஆனா நான் கோச்சிக்கவும் மாட்டேன். :))

Read more...

மங்களூர் சிவாவின் தாயாருக்கு கண்ணீர் அஞ்சலி

நம் நண்பர் மங்களூர் சிவாவின் தாயார் நேற்று இரவு நம்மை விட்டு பிரிந்துவிட்டார். நண்பரின் குடும்பத்தார் மனவலிமையுடன் இந்த சோகத்தை கடக்க வேண்டும். என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். உங்கள் துக்கத்தில் பங்குகொள்கிறோம் சிவா மாமா. இந்த துயர நிகழ்விலிருந்து விரைவில் மீண்டு வர ப்ரார்த்திக்கிறேன்.

Read more...
Powered by Blogger.

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP