ஏர் இந்தியா - மங்களூர் விமான விபத்து!



படம் உதவி: நன்றி என் டி டிவி

துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் 158 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் காயம் இல்லாமல் தப்பித்துவிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய விமான விபத்து இது. 160 பயணிகள், 2 விமான கேப்டன்கள், 4 விமான பணிப்பெண்கள் பயணித்துள்ளனர்.
158 பேர் குடும்பத்தை நினைத்தால் கொடுமையாக இருக்கிறது. என்ன சொல்லன்னு தெரியல. இதில் 19 சிறுவரகளும், 4 சின்ன குழந்தைகளும் அடக்கம். தீக்கிரையாகி சாகறது ரொம்ப கொடுமை இல்லயா.
:-(((




Read more...

ஆனந்த் - King of Chess

மற்ற விளையாட்டுகளை , கிரிக்கெட் என்ற நாசமாய்ப் போன சூதாட்டம் நாசப்படுத்திய ஒரு தேசத்தில் நிஜமான விளையாட்டு வீரர்கள் கவனிக்கப் படுவதே இல்லை. ஒரு சிலர் கவனிக்கப் பட்டாலும் பணமே குறிக்கோளாய் திசைமாறிவிடுவதும் உண்டு என்றாலும் விளையாட்டை மிகவும் நேசிக்கும் வீரர்களும் உண்டு.. விஸ்வநாதன் ஆனந்த், செய்னா நோவல் , பைசுங் பூட்டியா மற்றும் பலர்..

விஸ்வநாதன் ஆனந்த்...
சதுரங்க ராஜா.. செஸ் விளையாட்டில் இந்தியாவின் பெருமையை உலகளவில் அறிய செய்தவர்.. தன் அபார திறமையால் இன்னும் தொடர்ந்து உலக செஸ் மகுடத்தை சூடிக் கொண்டே இருக்கிறார்.. சில நாட்களுக்கு முன்( மே 11) நடந்து முடிந்த உலக சாம்பியன் பட்டத்தை நான்காவது முறையாக வென்று இந்தியாவின் பெருமையை நிலைநாட்டி இருக்கிறார்..வாழ்த்துகளும் பாராட்டுகளும் திரு ஆனந்த் அவர்களே..ஆங்கில ஊடகங்கள், செஸ் விளையாட்டு ராஜா என அவரைக் கொண்டாடின. தமிழ் ஊடகங்கள் செக்ஸ் விளையாட்டு ராஜா நித்தியானந்தனைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன இன்னும்..

 ஆனந்தின் சில சாதனைகளின் பட்டியல் :
  • 6 வயதில் செஸ் விளையாட ஆரம்பித்த ஆனந்த் தேசிய சப் ஜூனியர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.(1983 - 84)
  • 1984ல் உலக சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடம்.
  • 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆசிய சாம்பியன்.
  • 1987 சர்வதேச கிராண்ட் மாஸ்டரானார்.
  • 1998ல் உலகத் தரவரிசைப் பட்டியலில் 2வது இடம்.
  • 2000ல் முதல் உலக் சாம்பியன் பட்டம்.
  • 6 கம்ப்யூட்டர்களுடன் ஒரே நேரத்தில் விளையாடி 4 க்கு 2 என்ற அளவில் வென்றார்.
  • 3 முறை செஸ் ஆஸ்கர் விருது வென்றுள்ளார்.
  • இந்திய விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதை முதலில் பெற்றவர்.
  • அர்ஜுனா, பத்மஸ்ரீ( மிக இளம் வயதில் பெற்றவர்), பத்ம பூஷன், ஸ்போர்ட் ஸ்டாரின் “ 1995ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர்” ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
  • ஆனந்தின் ”My best games of Chess" என்ற புத்தகம் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் வெளியிடப் பட்டது.
  • உலக சாம்பியன் பட்டம்- 2000, 2007, 2008, 2010
  • கோரஸ் சூப்பர் கிராண்ட்மாஸ்டர் டோர்னமண்ட் - 1989, 1998, 2003, 2004, 2006)
  • கோர்சிகா மாஸ்டர்ஸ் - 2000, 2001, 2002, 2003, 2004
  • செஸ் உலக்க் கோப்பை - 2000, 2002
  • இன்னும் ஏராளமான போட்டிகளையும் விருதுகளையும் வென்றுள்ளார்..
மீண்டும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் ஆனந்த்.. இந்தியா உங்களால் பெருமை அடைகிறது.. தமிழனாய் கூடுதலாகவும்..

Read more...

Google Analytics பதிவர்களுக்காக

குறிப்பு : இது என் பழைய வலைப்பூவில் சென்ற ஆண்டு எழுதியதில் இருந்து எடுத்து மீள்பதிவிடுகிறேன்.. சிலர் அப்போதே படித்திருக்கலாம்.. இதுவரை கூகுள் அனலிடிக்ஸ் பற்றித் தெரியாதவர்களுக்கு மட்டுமே இந்தப் பதிவு.. தெரிந்தவர்கள் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்..

------------------------------------------------------

கூகுள் அனலிடிக்ஸ் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாத சிலருக்காக இந்தப் பதிவு. இது நம் வலைபக்கத்துக்கு வருபவர்கள் பற்றிய துல்லியமான தகவலை தருகிறது. எங்கிருந்து வந்திருக்கிறார்கள். எவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள்.. எந்த பதிவுக்கு எவ்வளவு பேர், அவர்கள் உபயோகிக்கும் உலவி, இயங்கு தளம் , நாடு, எதைத் தேடும் போது நம் வலைப்பக்கம் வந்தார்கள்... என இன்னும் ஏராளமான தகவல்கள்.


http://www.google.com/analytics/ என்ற இணையதளத்துக்கு போய் கூகுள் கணக்கை வைத்து லாகின் பண்ணுங்க. அல்லது ஏற்கனவே கூகுள் கணக்கில் லாகின் செய்து இருந்தால் , http://www.google.com/analytics/ முகவரிக்கு சென்றதும் கிடைக்கும் பக்கத்தில் Access Analytics என்பதை தேர்வு செய்யவும். கூகுள் கணக்கு இல்லாதவர்கள் ஒன்றை ஆரம்பித்துக் கொள்ளுங்கள்.


பிறகு அதில் வலது பக்கம் + Add new account என்பதை தேர்வு செய்யவும். அடுத்து தெரியும் பக்கத்தில் உள்ள ”You are just a few steps from Google Analytics. Click on the Sign Up button to get started.” என்பதன் கீழே இருக்கும் Sign Up பொத்தானை அமுக்கினால் அடுத்தடுத்து வரும் பக்கங்களில் கேட்கும் விவரங்களை பூர்த்தி செய்யுங்கள். பிறகு ஒப்பந்தத்தை எற்றுக் கொள்வதாக உறுதி அளித்து தொடருங்கள்.

அடுத்தப் பக்கத்தில் கிடைக்கும் நிரலியை வெட்டி உங்கள் வலைப்பக்கத்தின் நிரலிகளுக்குள்.../body.. ;என்பதற்கு மேல் ஒட்டி விடவும். அம்புட்டு தான்.

சரியாக சேர்த்திருக்கிறீர்களா என்பதை அறிய
http://www.google.com/support/analytics/bin/answer.py?hl=en_US&answer=55480&utm_id=ad

அப்பாலிக்கா வித விதமா விவரங்கள் பார்க்க வேண்டியது தான்.. :)



நிரலியை(script) உங்கள் தளத்தில் சேர்த்த 24 மனி நேரங்களுக்குப் பின் உங்கள் தளம் பற்றிய பல்வேறு தகவல்கள் இங்கு சேமிக்கப் படும். எதைத் தேடி வந்திருக்கிறார்கள் என்ற பகுதி ரொம்பவே சுவாரஸ்யமானது.. :) எஞ்சாய்..

Posted by...

Read more...

நோ.. ஐயாம் பாவம்...

ரொம்ப நாளாச்சே.. கொஞ்சம் நம்ம ப்ளாக் பக்கம் யாரெல்லாம் ஒதுங்கி இருக்காங்கன்னு வேடிக்கைப் பார்க்கலாம்னு தோணுச்சி.. காசாப் பணமா.. பார்த்துடுவோம்.. எந்த மாசத்துல எவ்ளோ பேர் எங்க இருந்து எப்டி வந்திருகாங்கன்னு பார்த்து முடிச்சதும், எதை எல்லாம் தேடி வந்திருக்காங்கன்னு பார்த்தேன். இருக்கிறதுலையே இதான் ரொம்ப இண்ட்ரஸ்டிங் ஏரியா.. :

  • சுற்றுலாவைத் தேடி போன வருஷம் 24 பேர் இந்த வருஷம் 83 பேர்..
  • ப்ரியாவைத் தேடி போன வருஷம் 13 பேர் இந்த வருஷம் 81 பேர்.. கிடைச்சாங்களா ஜனங்களே? :)
  • புதிய தலைமுறையத் தேடி 89 - 57.. நாங்கல்லாம் புதிய தலைமுறை ஆளுங்களாக்கும்..
  • சுற்றுலாத்தலங்களைத் தேடி 35 பேராம்..
  • நெல்லைத் தேடி 10 - 25
  • முத்தம் கேட்டு 12 - 17 ( இதை எல்லாமாடா இணையத்துல தேடுவீங்க.. பயலுக ரொம்பக் காஞ்சிப் போய் இருக்கானுங்க போல.. :))
  •  அம்மாவைத் தேடி 2 - 12 .. 
  • குற்றம்னு தேடி கொஞ்சம் பேர் வந்திருக்காங்க.. இங்க வந்து தான் ஃபீல் பண்ணி இருப்பாங்க.. தேடினது எவ்ளோ பெரிய குற்றம்னு..
  • நட்சத்திரம்னு தேடி இருக்காங்க.. கூகுள் கரெக்டா வழி காட்டி இருக்கு.. :)
  • கதறக் கதறத் தேடி 2 பேர் வந்திருக்காங்க.. :)
  • நன்றி, நெல்பயிர், காடு, விவசாயம் இன்னும் என்னென்னவெல்லாமோ தேடி வந்திருக்காங்க.. மொத்தம் 465 வார்த்தைகளைத் தேடி வந்திருக்காங்க...
எல்லாம் சரி தான்.. ஆனா இன்னொன்னைத் தேடியோ அல்லது அதை செய்யவோ இங்க கொஞ்சம் பேர் வந்திருக்காங்க..அது..........

”தற்கொலை” என்று தேடி இருக்காங்க.. கொய்யால சாவுங்கடான்னு இங்க அனுப்பி வச்சிருக்கு கூகுள்.. போன வருஷம் 12 பேரும் இந்த வருஷம் 8 பேரும் இப்டி தற்கொலைப் பண்ணிக்க வந்திருக்காங்க.. பாவம் யாரு பெத்த புள்ளைங்களோ..:((

Read more...

ஜெயமோகனை ரவுண்டு கட்டிய பதிவர்கள்






From கவிஞர் கலாப்ரியா பாராட்டு விழா
எங்க ஊர்ல இப்டி தான் ரவுண்டு கட்டுவோம்.. உங்க ஊர்ல? :-)


நேற்று ( 09.05.2010) கோவையில் விஷ்ணுபுரம் வாசகர் பேரவை சார்பில் கவிஞர் கலாப்ரியாவுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியை செல்வேந்திரன் தொகுத்து வழங்கினார். பதிவரும் கவிஞருமான வா.மணிகண்டன் , கவிஞர் சுகுமாறன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கவிஞர் வெண்ணிலா, எழுத்தாளர் ஜெயமோகன், மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

நிகழ்வின் சிறப்பம்சங்கள்

  • மாண்புமிகு சஞ்சய்காந்தி அவர்கள் கலந்துக் கொண்டார்..
  • ஜெயமோகன் மிகக் குறைவாகப் பேசினார்.. ( நீயெல்லாம் இருந்தா எப்டிடா அதிகம் பேசத் தோனும்?).தூக்கக் கலக்கத்திலேயே கலந்துக் கொண்டார் போல.. 
  • என் ப்ரார்த்தனை பலித்தது.. பெரியவர் ஞானி வரவில்லை.. காலாவதியான கம்யூனிசம் பற்றி பக்கம் பக்கமாக பேசி இருப்பார்.. அவ்வ்வ்..
  • கவிஞர் வெண்ணிலா, ரயில்நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தை சொன்னார். ஒரு பெரியவர், காதல் மணம் முடித்து பின் பிறந்த வீட்டிற்கே வந்துவிட்ட தன் மகளை எதோ ஒரு ஆசிரமத்தில் விட சென்றுக் கொண்டிருந்தாராம். அந்தப் பெண்ணிற்கு சிறுவயதில் ஒரு மகன். பெரியவர் அவனை வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவாராம். அந்த சிறுவனுக்கு இனி தன் தாயைப் பார்க்கும் சூழல் கிட்டுவது சந்தேகம் என்றான். நேற்று அன்னையர் தினம். 
  • மணிகண்டன் கொஞ்சம் பதட்டமாக காணப்பட்டார். வேகமாக பேசினார். பேசுவது மனதில் நிற்கவில்லை. ஏராளமாக எழுதி வந்திருப்பார் போல. அவ்வளவும் பேசி விட வேண்டும் என மிக வேகமாக பேசிக் கொண்டிருந்தார். மணி, கவனம். கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களிடம் பில்டப் கொடுப்பதற்காகவே பல கவிஞர்கள் பெயரை சொல்லிக் கொண்டிருப்பாராம். ;)
  • செல்வெந்திரன் பதட்டம் இல்லாமல் இயல்பாய் தொகுத்து வழங்கினார். டிவிக்கு போங்க பாஸ்..
  • செம்மொழி மாநாட்டில் கோவைக்காரர்களுக்கு விருப்பம் இல்லை என்பது நாஞ்சில்நாடன் பேச்சிலும் தெரிந்தது. சில நாடுகளில் “ நீங்கள் இனனர்ர் பிறந்த நாட்டிற்கு வந்துள்ளீர்கள்” என விமான நிலையங்களில் பேனர் இருக்குமாம். நம் நாட்டில் அது போல் இல்லை என வருத்தப் பட்டார். வண்ணதாசன், நாவல் எழுத சொல்லி தனக்கு 6 கடிதம் எழுதிய பின்னரே முதல் நாவல் எழுதினாராம்.
  • மரபின் மைந்தன் முத்தையா மிக சுவாரஸ்யமாக இயல்பாய் பேசினார். மேடைப் பேச்சு விளையாடுகிறது நாவில்.
  • கிட்டத்தட்ட அனைவருமே கலாப்ரியாவின் இரண்டு கவிதைகளை குறிப்பிட்டார்கள். 1. அவள் அழகாய் இல்லை என்பதால் எனக்கு தங்கையானாள் . 2. பறவைகளின் பாஷை தெரியவில்லையே என வருத்தப் படுவது போல் ஒரு கவிதை.
  • இவை இரண்டையும் பெரும்பாலும் எல்லாராலும் பேசப்படும் கவிதை என கலாப்ரியா குறிப்பிட்டார். தன் மனைவிக்கு நன்றி சொன்னார். நேற்று சரியான நாள் தான்.
  • 1972 அக்டோபரில் ஒரு நாள் கோவிலுக்கு சென்றாராம் கலாப்ரியா. அப்போது ஒரு குறுகிய இடைவெளியில் எதிரில் ஒரு பெண் வந்தாராம். அவரை இடித்து விடக் கூடாது என்பதற்காக முடிந்தவரை விலகி நின்றாராம். அந்தப் பெண் அழகாக இல்லையாம். ஒருவேளை அழகான பெண்ணாக இருந்தால் இடித்திருப்பாராம். இந்த நிகழ்வு தான் அந்த கவிதை எழுத காரணமாம். :)
  • திருப்பூரிலிருந்து 2 லாரிகளில் வெயிலான் தலைமையில் பதிவர்கள் திரண்டு வந்திருந்தார்கள். அனைத்துப் பதிவர்களுடன் ஜெயமோகன் மிக நட்பாய் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். 
விவரமாக இலக்கிய சிங்கங்கள் எழுதுவார்கள்.. நான் சென்ற போது ஒரு பெண் வரவேற்புரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். யாரெனத் தெரியவில்லை.

பிஸ்கி: இரும்படிக்கிற இடத்துல ஈ க்கு என்ன வேலை எனக் கேட்கும் எதிர்கட்சியினருக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 9 மனி முதல் 12 மணி வரை மின் தடை. ஊட்ல குந்திகினு இன்னா தான்யா செய்றது?



குசும்பனுக்கு எச்சரிக்கை: இந்த படங்களில் இருக்கும் பதிவர்களை வைத்து எதும் கிண்டல் செய்ய நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

Read more...

இது சினிமா காட்சி இல்லீங்க.. கோவையில் நடந்த கொடுமை தானுங்க.

மே 08, 2010 - தினமலர் கோவை மாவட்ட செய்தி

கோவையில், போலீஸ் முன்னிலையிலேயே இன்ஜி., மாணவர் மீது, ரவுடிக்கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. சம்பவ இடத்திலிருந்த போலீஸ்காரர், அவசர உதவி கோரி போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொண்ட போது, 'எல்லை பிரச்னையை' காரணம் காட்டி, உதவி மறுக்கப்பட்டது. அதன் பின் நிகழ்ந்த களேபரமும், போலீஸ் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்களும், போலீஸ் மீதான மக்களின் நம்பிக்கையை நிலைகுலைய செய்துள்ளன.

நேற்று முன்தினம் இரவு 11.00 மணி(இன்று 08.05.2010). கோவை நகரில், மசக்காளிபாளையம் ரோட்டிலுள்ள 'டாஸ்மாக்' மதுக்கடை பாரில் 50க்கும் மேற்பட் டோர் போதை ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த ஒரு கும்பல், திடீரென அருகிலிருந்த வாலிபரை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்க துவங்கியதும், பலரும் அலறியடித்து ஓடினர். தாக்குதலுக்குள்ளான வாலிபர் உயிர்தப்ப மசக்காளிபாளையம் ரோட்டில் அரை கி.மீ.,தொலைவுக்கு ஓட, விடாமல் விரட்டிச் சென்ற கும்பல் மரக்கட்டை, கற்களால் மூர்க்கத்தனமாக தாக்கியது.மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கடையின் ஷட்டர் மீது சரிந்த பிறகும், பலரது முன்னிலையிலும் தாக்குதல் தொடர்ந்தது. அதிர்ச்சியடைந்த சிலர், போலீஸ் 'கன்ட்ரோல் ரூமுக்கு' போனில் தெரிவித்ததும், அடுத்த 15வது நிமிடத்தில் ரமேஷ் என்ற போலீஸ்காரர் ரோந்து பைக்கில் வந்தார்.

       அப்பகுதி களேபரமாக காட்சியளிக்க, அடிபட்ட வாலிபர் ரத்தம் சொட்ட, சொட்ட உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை சுற்றிநின்றிருந்த கும்பல், அப்போதும் தாக்கிக்கொண்டே இருந்தது.கும்பலை தடுக்கமுயன்ற போலீஸ்காரர் ரமேஷ் தள்ளப்பட்டு, அவரிடம் இருந்த'வாக்கி - டாக்கி'யும், மொபைல் போனும் தவறி விழுந்தது. பதற்றமடைந்த போலீஸ்காரர் 'வாக்கி - டாக்கி'யை தேடி எடுத்து கன்ட்ரோல் ரூம் போலீசாரை தொடர்பு கொள்ள முயன்ற போது, அது இயங்கவில்லை. அருகிலிருந்த ஒருவர் தனது மொபைல் போனை போலீஸ்காரரிடம் கொடுத்தார். பீளமேடு போலீஸ் ஸ்டேஷனை போனில் தொடர்பு கொண்ட போலீஸ்காரர் ரமேஷ், உதவிக்கு போலீசாரை அழைத்தார். மறுமுனையில் பேசிய போலீஸ்காரர், 'அது எங்க 'லிமிட்' இல்லை; நீ சிங்காநல்லூர் போலீசுக்கு போன் போடு...' எனக்கூறிவிட்டு, இணைப்பை துண்டித்துவிட்டார். மறுபடியும் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்த போலீஸ்காரர் விஷயத்தை சொல்ல, அடுத்த நிமிடமே 'ஒயர்லெஸ்' தகவல் பரிமாற்றம் அலறியது. அதன் பிறகும் கூட அப்பகுதிக்கான இரவு ரோந்துப்பணி உதவிக்கமிஷனர் முத்துராஜ் மற்றும் அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரவில்லை. எல்லாம் முடிந்து அரை மணி நேரம் கழித்து, பீளமேடு எஸ்.ஐ.,முத்துசாமியும், சிங்காநல்லூர் பெண் எஸ்.ஐ., பிரபாவதியும் சம்பவ இடத்துக்கு 'சினிமா போலீசாக' கடைசியில் வந்தனர்.

      அதற்குள், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வாலிபரின் தந்தை, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு ஓடிவந்தார்; அவர், ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிகிறார்.இவர் வந்த பிறகு தான், அடிபட்ட வாலிபர் சி.ஐ.டி., கல்லூரியில் பி.இ.,இறுதியாண்டு படிக்கும் மாணவர் பிரகாஷ்(19) என்பது தெரியவந்தது. தனது மகன் உயிருக்கு போராடுவதை கண்ட தந்தை, போலீசிடம் வாக்குவாதம் செய்து மகனை காப்பாற்ற கெஞ்சினார். ஆத்திரமடைந்த போலீசார், அவரை கழுத்தை பிடித்து தள்ளி ஜீப்பில் ஏற்றினர்; தாக் குதலில் ஈடுபட்டவர்கள் 'ஹாயாக' அருகிலேயே நின்றிருந்தனர். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர், போலீசுடன் வாக்குவாதம் செய்தனர். அதன்பின் வேறுவழியில்லாமல், தாக்குதலில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த சிலரையும் போலீசார் ஜீப்பில் ஏற்றினர். அப்போது, சிங்காநல்லூர் எஸ்.ஐ., பிரபாவதியுடன் மொபைல் போனில் பேசிய இரவு ரோந்து இன்ஸ்பெக்டர், தாக்குதலில் ஈடுபட்ட ரவுடி கும்பலின் தலைவனை விடுவிக்குமாறு உத்தரவிட்டார். அடுத்த விநாடியே ஜீப்பில் இருந்த தாக்குதல் கும்பல் விடுவிக்கப்பட்டது;

     இத்தனையும், பலரது சாட்சியாகவே அரங்கேறியது. தாக்கிய நபர்களை விடுவித்தது தொடர்பாக அங்கிருந்த சிலர் போலீசிடம் கேள்வி எழுப்ப, 'அவர்கள் எங்கே போய்விடுவார்கள்; காலையில் ஸ்டேஷனுக்கு வரவழைத்து விசாரிக்கிறோம்' என, பெண் எஸ்.ஐ., 'பொறுப்புடன்' பதிலளித்துள்ளார். இத்தனையும் நடக்கும் வரை, அடிபட்ட நபர் உயிருக்கு போராடியபடியே தரையில் சரிந்து கிடந்தார். அருகிலிருந்தோர் அவரை அரசு மருத் துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். இதை தடுத்த ஒரு எஸ்.ஐ., அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்குமாறு மிரட்டல் தொணியில் கூறினார் (அரசு மருத்துவமனையில் சேர்த் தால், வழக்குப்பதிவு செய்ய நேரிடும் என்பதால்). அவ் வாறே அந்த வாலிபர் தனியார் மருத் துவமனையில் சேர்க்கப்பட்டார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால், பின்னர் அவர் பீளமேட்டிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

    இவ்வளவுக்கு பிறகும் நேற்று மதியம் வரை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இச்சம்பவம் குறித்து, கமிஷனர் அலுவலக அதிகாரிகளுக்கு கூட தகவல் தெரிவிக்கப்படாதது ஆச் சரியமளிக்கிறது; இது தான், மாநகர போலீஸ்.

கேள்விக்கு என்ன பதில்? :

  • போலீஸ்காரர் சம்பவ இடத்திலிருந்து அவசர உதவி கோரிய நிலையில், எல்லை பிரச்னையை காரணம் காட்டி வேறு போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொள்ளுமாறு, பீளமேடு போலீசார் கூறியது சரியா?
  • ஒரு சம்பவம் நடந்திருப்பதாக 'ஒயர்லெஸ்' தகவல் பரிமாற்றம் அலறிய போது, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவிக்கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்துக்கு வரவேண்டாமா? வராத நிலையில், அவர்களது அந்நேர பணி என்ன?
  • சம்பவ இடத்துக்கு தாமதமாக வந்த எஸ்.ஐ.,க்கள், தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் அருகிலேயே இருந்தும் கைது செய்யாமல், உயிருக்கு போராடிய வாலிபரின் தந்தையின் மீது ஆத்திரப்பட வேண்டிய அவசியம் என்ன?
  • பொதுமக்களின் எதிர்ப்பால், தாமதமாக கைது செய்யப்பட்டு ஜீப்பில் ஏற்றிய ரவுடிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரிக்காமல், சம்பவ இடத்திலேயே விடுவித்தது எந்த சட்டத்தின்படி சரி?
  • பலர் முன்னிலையிலும் பிடிபட்ட ரவுடி கும்பலை விடுவிக்குமாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் போனில் உத்தரவிட வேண்டிய அவசியம் என்ன? பின்னணி என்ன?
  • தாக்கப்பட்ட வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகும் கூட, வழக்குப்பதிவு செய்யாமல் போலீசாரை தடுத்தது யார்?
  • 'தாக்குதலுக்கு உள்ளான நபர் புகார் தரவில்லை; அதனால் வழக்குப்பதிவு செய்யவில்லை' என போலீசார் 'சாக்கு போக்கு' கூறலாம். அவ்வாறே இருந்தாலும், சம்பவத்தை நேரில் கண்ட போலீஸ்காரர் ரமேசிடம் புகார் பெற்று வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?
  • 'இரவு 10.00 மணிக்கு 'டாஸ்மாக்' கடைகளை மூடிவிட வேண் டும்' என்ற அரசு உத்தரவை மீறி, நள்ளிரவு வரை நகரில் 'டாஸ்மாக்' பார்கள் போலீசுக்கு தெரியாமலா செயல்படுகின்றன?
  • இது போன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடக்காதவாறு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?
தினமலர் செய்தி : 08.05.2010

குறிப்பு : கோவையில் மரங்களோடு சேர்ந்து மனித நேயமும் கடமையும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. மரங்களை இழந்ததும் வாகன நெரிசலும் உடன் இது போன்ற அசாதாரான சூழலும் விரைவில் கோவை “வாழத்தகுதியற்ற” நகரமாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. நேர்மையான சுறுசுறுப்பான மாவட்ட ஆட்சித்தலைவர், நினைத்த நேரத்தில் தொடர்பு கொள்ளும் நிலையில் மிக எளிமையான மாநகர மேயர், மிக நேர்மையான மாநகராட்சி ஆணையர் மற்றும் செயல்திறனும் நம்பிக்கையும் நேர்மையும் கொண்ட மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோர் இருந்தும் இந்த நிலை.. திரு. சைலேந்திர பாபு , கோவையின் காவல்துறை ஆணையராக பதிவியேற்ற போது கோவைவாசிகள் சந்தோஷமடைந்தார்கள். அவருக்கே இது சவால் தான்..

Read more...

விவசாய விளைபொருட்கள் விலை.. கொஞ்சம் அப்டி இப்டிதானுங்க..

விவசாய முறைகளைப் போலவே அதில் விளையும் பொருட்களின் விலையும் கூட பலவகையில் மாறுபடும். காவிரி டெல்டா பகுதியில் வாய்க்கால் பாசனத்தில் நெல் பயிரிடும் முறையும் கிணற்றுப் பாசனத்தில் நெல் பயிரிடும் முறையும் வேறு மாதிரி இருக்கும். கிணற்றுப் பாசனத்தில் தண்ணீர் பாயும் வேகம் குறைவாக இருக்கும் என்பதால் குறைவான இடைவெளிகளுடன் சற்று அடர்த்தியாக நடுவார்கள். வாய்க்கால் பாசனத்தில் நீர் வரத்து வேகம் அதிகம் இருக்கும் என்பதால் அதிக இடைவெளியுடம் நடுவார்கள். அதே போல் விளைவித்த பொருட்களை சந்தைப் படுத்துவதும் கூட எல்லாப் பகுதிகளிலும் ஒரே மாதிரி இருக்காது.


தக்காளியை நேரடியாக விற்கும் வாய்ப்புக் குறைவு. உழவர் சந்தைகளிலும் கூட ஓரளவு தான் விற்பனை செய்ய முடியும். எனவே ஆங்காங்கே இருக்கும் காய்கனி கமிஷன் மண்டிகளில் தான் விற்க வேண்டும். அவர்கள் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையில் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவார்கள். விற்பனைத் தொகையில் கமிஷன் பெற்றுக் கொள்வார்கள். ஏலம் மூலம் விற்பனை நடைபெறும். விற்பனைக்குப் பின் வியாபாரிகளிடம் பணம் பெற்று தினமுமோ, வாரம் ஒருமுறையோ பணம் வழங்குவார்கள்.

எங்கள் ஊருக்கு அருகில் 2 நகரங்களில் இந்த வகை மண்டிகள் உண்டு. ஒன்று 3 கிமீ தொலைவிலும் இன்னொன்று 10கிமீ தொலைவிலும் இருக்கின்றன. இரண்டிலும் ஒரே மாதிரி விலை கிடைக்காது. 3 கிமீ தொலைவில் இருப்பது சிறிய நகரம் அல்லது சற்று பெரிய கிராமம். அங்கே மிகக் குறைவான அளவில் தான் வியாபாரிகள் வருவார்கள். அவர்களுக்கானத் தேவையும் குறைவாகவே இருக்கும். எனவே அதிக விலையில் ஏலம் கோர மாட்டார்கள். 10கிமீ தொலைவில் இருப்பது 3 கிமீ தொலைவில் இருப்பதை விட சற்று பெரிய நகரம். சேலம், திருப்பத்தூர் போன்ற நகரங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருவார்கள். மண்டி வைத்திருப்பவர்களும் வாங்கி தினமும் சென்னைக்கு அனுப்புவார்கள்.

எனவே தக்காளிக்கானத் தேவையும் அதிகமாக இருக்கும். போட்டிப் போட்டுக் கொண்டி ஏலம் கோருவார்கள். அதிலும் தரமான பழங்களாக இருந்தால் நல்ல விலை கிடைக்கும். அதிக விலை சொல்லும் வியாபாரிக்கு விற்பனை செய்துவிடுவார்கள். விற்பனைக்கு செல்லும் முன் கூடைகளில் பழங்களை அடுக்குவதில் சில அஜால் குஜால் வேலைகள் செய்வதன் மூலம் நல்ல விலைக்கு விற்க முடியும்.ஆகவே சுமார் 15 கிமீ தொலைவிற்குள்ளே வேறு வேறு விலைகள் கிடைக்கும்.. :)


அதே போல் பருத்தி விலையும் ஒவ்வொரு பகுதியிலும் மாறுபடும். சில நூறுகள் வித்தியாசம் இருக்கும். பருத்தியைப் பொருத்தவரை பெரும்பாலும் கூட்டுறவு சங்கங்களின் மூலமே ஏலம் நடைபெறும். எந்த கூட்டுறவு சங்கத்திற்கு அதிக வியாபாரிகள் வருகிறார்களோ அங்கு நல்ல விலை கிடைக்கும். எங்கள் ஊருக்கு மிக அருகில் 2 சங்கம் இருந்தும் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கொங்கனாபுரம் ஏல மையத்தில் தான் பருத்திலைக் கொண்டு செல்வோம். அங்கு தான் வியாபாரிகள் அதிகம் வருவார்கள். விலையும் சற்று கூடுதலாக இருக்கும். வியாபாரிகள் பருத்தியை வாங்கிச் சென்று மில்களுக்கு விற்றுவிடுவார்கள். சேலம் மண்டலத்தில் அவ்வளவாக பஞ்சாலைகள் இல்லாததாலோ என்னவோ வியாபாரிகள் மூலம் தான் விவசாயிகள் பருத்திலை விற்க முடிகிறது. பஞ்சாலை அதிகம் உள்ளப் பகுதிகளில் ஆலை நிர்வாகமே விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்கிறதா எனத் தெரியவில்லை. அதே போல் மஞ்சளும்..

இப்போ கரும்புக்கு வாரேன்..கரும்பு பயிரிடுவதில் 2 வழிமுறைகள் பின்பற்றப் படுகின்றன. அதைப் பொருத்து தான் விலையும் கிடைக்கும்.

1. நம் எல்லையில் இருக்கும் கூட்டுறவு அல்லது தனியார் சர்க்கரை ஆலையுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டு பயிரிடுவது. இதில், கரும்பு நடவு செய்தவுடன் குறிப்பிட்ட ஆதாரங்களுடன் அருகில் இருக்கும் ஆலையுடன் ஒப்பந்தம் செய்துக் கொள்ளவேண்டும். 5 ஏக்கரில் ஒருவர் கரும்பு பயிரிட்டால் முழுமையாகவோ அல்லது குறிப்பிட்ட அளவுக்கோ ஆலையுடம் ஒப்பந்தம் செய்துக் கொள்ளலாம்.தனியார் ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்துக் ஒள்வதன் முழுமையான பலன்கள் எனக்குத் தெரியாது. கூட்டுறவு ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டால், ஒப்பந்தம் செய்துக் கொண்ட பரப்பளவுக்கு தேவையான உரம், விவசாயக் கூட்டுறவு வங்கியில் கடனாகப் பெற்றுக் கொள்ள முடியும். உரத்திர்கான முதலீட்டுக்கு கவலைப் பட வேண்டி இருக்காது. கரும்பு விளைந்த உடன் வெட்ட வேண்டிய காலத்தில் அந்தப் பகுதியில் இருக்கும் ஃபீல்ட் ஆபிசரிடம் தெரிவித்துவிட வேண்டும். பதிவு மூப்பு அடிப்படையில் ஒப்பந்தம் செய்துக் கொண்ட பரப்பளவுக்கு மட்டும் “Cutting Order" கொடுப்பார். ஆலையில் செயல் திறனையும் அதிக விளைச்சலையும் பொருத்து பல சமயங்களில் நீண்ட நாட்களுக்கும் காத்திருக்க வேண்டி இருக்கும். ஒப்பந்தம் செய்த கரும்பை தனியாருக்கும் விற்க முடியாது. லாரி வாடகை, வெட்டுக் கூலி செலவெல்லாம் போக டன்னுக்கு 1100 முதல் 1250 வரை கிடைக்கும்.

தனியார் ஆலையுடன் ஒப்பந்தம் போட்டிருந்தாலும் இதே நடைமுறைகள் தான். தனியார் ஆலையுடன் ஒப்பந்தம் செய்துக்க் கொண்டவர்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும். சேலம் பகுதியில் தனியார் ஆலைகள் இல்லை. கூட்டுறவு ஆலைகள் மட்டுமே கதி. அவர்களிடம் அரசாங்கம் அறிவித்தபடி தான் விலை கிடைக்கும். வாகன வாடகை மற்றும் வெட்டுக் கூலி விவசாயிதான் கொடுக்க வேண்டும். மெலும் பிழிதிறன் எல்லாம் கணக்கிட்டு விவசாயியை பிழிந்துவிடுவார்கள். ஈரோடு போன்ற பகுதிகளில் தனியார் ஆலைகள் உண்டு. அவர்கள் சில நேரங்களில் வெட்டுக் கூலி மற்றும் வாகன வாடகையும் அளிப்பதுண்டு. சக்தி சுகர்ஸ் நிறுவனம் லாரி வாடகைக் கொடுத்துவிடுகிறார்களாம். வெட்டுக் கூலிக் கொடுபப்தில்லையாம். டன்னுக்கு 1750 வரை கொடுக்கிறார்கள் போலும். வெட்டுக் கூலி டன்னுக்கு 250 முதல் 350 ரூபாய் வரை வாங்குகிறார்கள். பொன்னி சுகர்ஸ் நிறுவனம் unseasonல் விவசாயி இடத்திற்கே வந்து லாரி வாடகை, வெட்டுக் கூலி எல்லாம் கொடுத்து டன்னுக்கு 1700 ரூபாய் வரை கொடுக்கிறார்களாம். ஈரோட்டுக்காரகள் கொஞ்சம் குடுத்து வச்ச விவசாயிகள். :)

2. எந்த ஆலையுடனும் ஒப்பந்தம் செய்யாமல் தனியாருக்கு விற்பது. ஒப்பந்தம் போடாத கரும்பை ஆலைகள் வாங்குவதில்லை. பல சமயங்களில் கூட்டுறவு ஆலைகளை விட தனியார் ஆலைகள் அதிக விலை கொடுப்பதால் சிலர் ஒப்பந்தம் போடாமல் இருப்பதுண்டு. அதிக விளைச்சல் இருக்கும் பருவத்தில் தனியார் ஆலைகளில் ஒப்பந்தம் போடாத கரும்புக்கு குறைந்த விலையே கிடைக்கும். அது போன்ற அசம்பாவிதங்களும் நடப்பதுண்டு. கூட்டுறவு ஆலையில் ஒப்பந்தம் செய்யாமல் 2 ஆண்டுகளுக்கு முன் காலம் கடந்து, டன் வெறும் 300 ரூபாய்க்கு தனியாருக்கு விற்க வேண்டி இருந்தது. :) . ஒப்பந்தம் செய்யாத கரும்பை தனியார் ஆலைகளுக்கு நேரடியாக விற்க முடியாது என்பதால் ஏஜெண்டுகள் மூலம் தான் விற்க முடியும். 1750 ரூபாயில் இவர்களுக்கான லாபம், வெட்டுக் கூலி, லாரி வாடகை எல்லாம் கணக்கிட்டு 1300 ரூபாய் வரை நமக்குக் கிடைக்கும். நேரடியாக விற்கும் போது 1550 ரூபாய் வரை கிடைக்கிறது. எப்படிப் பார்த்தாலும் கூட்டுறவு ஆலைகளைவிட அதிகம் தான்.


வெல்லத்துக்கு வாங்குபவர்கள் 1700 ரூபாய் வரைக் கொடுத்து வாங்கிக் கொள்வதாக நண்பர் ஈரோடு கதிர் சொல்கிறார். ஆனால் வெல்லம் தயாரிப்பவர்களின் தேவை மிகக் குறைவே. அவர்களால பரவலாக எல்லாருக்கும் பலன் கிடைக்க வாய்ப்பில்லை. வெல்லம் அதிகம் பய்ன்படுத்தப் பட்டது கிராமங்களில் தான். எங்கள் வீட்டில் எப்போதும் வெல்ல உருண்டை இருக்கும். இப்போதெல்லாம் கிராமத்தினர் பலகாரத்திலிருந்து Sweetக்கு மாறிவிட்டார்கள். வெல்லம் உபயோகிப்பதும் குறைந்துவிட்டது. டவுசர் போட்டுத் திரிந்த காலத்தில் எங்கள் வீட்டில் நூற்ற்க் கணக்கான வெல்ல உருண்டைகள் அடுக்கி வைத்திருந்ததும் தினம் அதை உடைத்துத் தின்றதும் ஊர் மக்கள் அடிக்கடி வந்து வாங்கிச் சென்றதும் நினைவில் இருக்கு. வெல்ல ஆலைகளில் பெரிய கொப்பரைகளில் கரும்புப் பாகுக் கொதித்துகொண்டிருக்கும் போது வரும் வாசனை வினோதமானது. மிகவும் பிடிக்கும்.

ரொம்ப பெரிய பதிவாக போய்ட்டிருக்கு. நிறுத்திட்டேன். :) இந்தப் பதிவை எழுத காரணமாக இருந்த நண்பர் ஈரோடு கதிருக்கு நன்றிகள். வழக்கம் போல் எழுத்துப் பிழைகளை பொறுத்தருள்க. :)

Read more...

நிலா & அபிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்



நம்ம நிலா பாப்பாவுக்கும் அபி பாப்பாவுக்கும் இன்னிக்கு(மே - 03) ஹேப்பி பர்த் டே. இந்த இரு குழந்தைகளும் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடன் என்றும் சந்தோஷமாய் வாழ வாழ்த்துவோம்.

Read more...
Powered by Blogger.

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP