நாளை முதல் தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப் படும் என செய்தி வெளியாகி இருக்கிறது.. தமிழகத்தில் மின்சார உபயோகம் அதிகமாவிட்டதால் வெளிமாநிலங்களில் இருந்து அதிக விலையில் மின்சாரம் வாங்கப் படுவதாகவும் மின்வாரியம் பெரும் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். தமிழகத்தில், ஆக்கப் பூர்வமாக செயல்படாத ஒரு துறை என்றால் அது மின்சார வாரியம் தான்.. அரசாங்க சாராயக் கடைகள் கூட சாதனை செய்கின்றன. ஆனால் மின்வாரியம் சவம் போல் இருக்கிறது..
தமிழகத்தில் கிடைக்கும் மின்சாரத்தை வைத்தே தடையில்லாமலும் கட்டணம் அதிகரிக்காமலும் மின்சாரம் வழங்க முடியும். இதை போகிற போக்கில் மிக சுலபமாக செயல்படுத்த முடியும்.. இலவச தொலைகாட்சி, குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக்குவது, கேஸ் அடுப்பு என பல ஆயிரம் கோடிகளை அரசாங்கம் செலவிடுகிறது.. இதே போல் வீடுகளில் உபயோபப் படுத்தும் பழைய குண்டு பல்புகளை மாற்றிவிட்டு சிக்கனமாக மின்சாரம் பயன்படுத்தும் CFL பல்புகளை இலவசமாகவோ மானியவிலையிலோ மக்களுக்கு வழங்கினால் பெரும் அளவில் மின்சார உபயோகத்தைக் கட்டுபடுத்த முடியும். இதற்காக விழிப்புணர்வு பிரச்சாரத்தைக் கூட அரசாங்கம் செய்வதில்லை..
தமிழகத்தின் மின் உபயோகத்தில் பெரும் பங்கு விவசாயத்துக்கு உண்டு.. அதுவும் இலவசமாக. இனி எந்த காலத்திலும் விவசாய மின்சாரத்திற்கு கட்டணம் விதிக்க முடியாது. அது நடக்காத காரியம். ஆனால் மின் நுகர்வை குறைக்க முடியும். தற்போது பரவலாக பயன்படுத்தப் படும் மோட்டார்கள் அனைத்தும் அதிக மின்சாரத்தை உறிஞ்சுபவை தான். அதற்கு பதில் ISI சான்றளிக்கப் பட்ட மோட்டார்களைப் பயன்படுத்தினால் மின் உபயோகம் பெரிய அளவில் குறையும். மோட்டார்களின் விலை அதிகம் என்பதால் யாரும் பழைய மோட்டார்களை மாற்ற முன்வருவதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் பழைய மோட்டார்களை மாற்றிவிட்டு ISI முத்திரையுள்ள புதிய மோட்டார்களை வாங்குவதற்கு அரசாங்கம் 50% மானியம் அளிப்பது மிக சொற்பமான விவசாயிகளுக்கேத் தெரியும்.
அதே போல் ISI முத்திரை உள்ள மோட்டார்களின் விலையும் அதிகமாகவே இருக்கிறது. இதனாலும் மக்கள் சாதாரன மோட்டார்களையே வாங்கிவிடுகிறார்கள். ISI முத்திரை உள்ள மோட்டார்களையும் குறைவான விலையில் விற்கவைக்க அரசாங்கத்தால் முடியும். ஒரு நிறுவனத்திற்கு ISO வாங்குவது போல் பொதுவாக ஒரே ஒரு ISI லைசன்ஸ் வாங்கிக் கொண்டு பொருள் தயாரிக்க முடியாது.. தயாரிக்கும் ஒவ்வொரு மாடலுக்கும் ISI சான்றிதழ் வாங்க வேண்டும். இதற்காக 30000 ரூபாய் கட்டணம் விதிக்கப் படுகிறது. பெரிய நிறுவனங்களுக்கு இது பெரும் தொகையல்ல.. ஆனால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இது பெரும் சுமை.. இதை பாதியாக்கினால் கூட போதும்.. சிறு நிறுவனங்கள் ISI சான்றிதழ் பெரும் வகையிலான தரத்தில் மின்சாரம் குறைவாக பயன்படுத்தும் மோட்டார்களை தயாரிப்பார்கள். விரைவிலேயே 100% ISI தர சான்றிதழுடன் மோட்டார்கள் விற்பனைக்கு வந்துவிடும். பின் தானாகவே மின் உபயோகமும் தற்போதைய அளவிலிருந்து குறைந்துவிடும்.
டிஸ்கி : மாசத்துக்கு ஒரு பதிவு கூட போடலைன்னா என் கூட எல்லாம் யார் சண்டைக்கு வருவாங்க.. :)